சவூதி அரேபிய மன்னர்களின் ஆடம்பரம்

வைக்கம் முகம்மது பஷீர்




முகம்மது நபிக்குப் பிறகு 5-6 நூற்றாண்டுகள் வரை, பொற்காலமாக இருந்தது. அதற்குப் பிறகு முஸ்லிம்கள் துயில் கொள்ள ஆரம்பித்தார்கள். 1000 வருடத் துயில். மெதுவாகச் சிலர் விழித்துக் கொண்டு எங்க உப்பப்பாவுக்கொரு ஆனை இருந்தது' என்று சொல்லிப் பவுசு கொண்டாடுகிறார்கள். அறிவியல் சாஸ்திரத் துறைகளில் முதன் முதலாக உலகிற்கு அர்ப்பணிப்புச் செய்தவர்கள் முஸ்லிம்கள்தான். இதை நானாகச் சொல்லவில்லை. வரலாற்றாய்வாளர்களாகிய பென்சும், டோயன்பியும் சொன்னதுதான். அதெல்லாம் பழங்கதைகள். முஸ்லிம்கள் இப்போது கஃபாவுக்கு  தங்க வாசல் செய்து கொண்டிருக்கிறார்கள். 

ஹோனலூலு - நகரும் அரண்மனை சௌதி அரேபியாவில் பஹத் மன்னரின் கப்பல், ஆறு மாடிகள் உட்பட ஒரு ஹெலிபேடும் மருத்துவமனையும் அதிலிருக்கின்றன. ஆக மதிப்பு வெறும் 45 கோடி ரூபாய்தான். இங்கிலாந்தில் வைத்து இன்னும் கொஞ்சம் மெருகுபடுத்தினார்கள். 21 கோடி ரூபா செலவில். ஆக மொத்தம் 66 கோடி. 

மாத்ருபூமி, மனோரமா போன்ற பத்திரிகைகளில் படித்த செய்தியில், பஹத் மன்னரின் சில கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வாகனத்தைப் பற்றியும் அறிய முடிந்தது. ரியாத், மக்கா, மதீனா, ஜித்தா ஆகிய நகரங்களில் கோடி கோடியாக செலவு செய்து அரண்மனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. இப்போது கடலில் ஒரு தீவை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதிலும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான அரண்மனைகள் எழும்பும்.

இறைத்தூதர் முஹம்மது நபியைப் பற்றியும் குர்ஆனைப் பற்றியும் அறிந்திருப்பீர்கள். முஹம்மது நபிக்குச் சொந்தமாக ஒரு படுக்கை கூட கிடையாது. காலையில் எழுந்திருக்கும் போது ஈச்சமரத்தின் கீற்றுகளால் முடையப்பட்ட பாயின் அடையாளங்கள் அவரின் உடலெங்கும் பதிந்திருக்கும்.

இறைவனின் தூதராக முஹம்மது பிறந்து வளர்ந்து மரணமடைந்த நாடு சௌதி அரேபியா. திருக்குர்ஆன் அருளப்பட்ட நாடு, குர்ஆனின் முதல் வார்த்தையே வாசிப்பீராக என்பதுதான். உங்களுக்குத் தெரியுமோ என்னவோ, 82 விழுக்காடு மனிதர்கள் எழுத்து வாசனை அறியாதவர்கள் என்று சொல்லப்படுகிறது. நான் சொல்வதையெல்லாம் டிட்ஃபார் டாட் பிரசுரிக்குமென்றால், இந்தப் பத்திரிகையை சில முஸ்லிம் தேசங்கள் தடை செய்யக்கூடும். இப்போது 50 முஸ்லிம் தேசங்கள் இருக்கின்றன. சுமார் 100 கோடி முஸ்லிம்களும் இருக்கிறார்கள். சுன்னி, முஜாஹித், ஜமாஅதே இஸ்லாமிய, காதியானி, ஷீஆக்கள், மைதஸீன், துருசி, ஷாஃபி, ஹனஃபி, ஹம்பலி, மாலிக், அஃலே ஹதீஸ், அஃலே குர்ஆன் இப்படிப் போகின்றன அவை. இதில் உண்மையான முஸ்லிம்கள் யார்? இஸ்லாத்துக்குள் அரசாட்சி இருக்கிறதா? மன்னர்களும் சுல்தான்களும் சக்கரவர்த்திகளும் முஸ்லிம் தேசங்களில் ஏன் இப்படி இராணுவ ஆட்சி. 

பழிவாங்கல்



ஆகாயத்தில் கருமேகங்கள் சூழத் தொடங்கி விட்டால்,நெஞ்சுக் குழிக்குள்ளிருந்து பற்றிப் பரவும் அச்சத்தின் அழுத்தத்தில் தவித்துப் போய்விடுவது மீராசாஹிபின் இயல்பாகி விட்டது. 

தொலைவுக்குச் சென்று, விறகு வெட்டியெடுத்து சைக்கிளில் கட்டிக் கொணர்ந்து விற்றுப் பிழைக்கும் தனது அன்றாட வாழ்க்கைக்கு மழையொரு பெரிய பாதிப்பில்லை என்றிருக்க, அவரது இவ்வதீத அச்சத்திற்கான காரணம் என்ன?

“அந்தப் பக்கம் போவாதீங்க நானா, காண் வெட்டிப் போட்டிருக்கானுகள்…”

“கரபாப் போவானுகள். காண் வெட்டிப் போட்டு, இப்பிடித் துறந்து போட்டுட்டுப் போயிருக்கானுகள். எவ்வளவு காலமா இப்பிடியே கிடக்குது…”

“போன கிழம, எடுகேசன் ஒபிஸ்ல வேல பாக்கிற சுபைர் நானா, நேத்து கரீம் சேர், இண்டைக்கு ஆட்டாக்கார ஹனீபா. காணுக்குள்ள உழுந்து கால உடெச்சிக்கிட்டு வாட்ல கிடக்காங்க. மழ பெஞ்சி வெட்டின மடுவுக்குள்ள தண்ணி தேங்கி நிண்டா, மடுவு மட்டயெல்லாம் எப்பிடி விளங்கும்…?”

“இந்தப் புதினமான டெங்கு நுளம்பெல்லாம் யாருக்குத் தெரியும்! எப்ப இந்தக் காண் மண்ணாங்கட்டிகளக் கொண்டாந்தானுகளோ அப்பயிருந்து புடிச்சிச்சி சனி”

“ஓம் ராத்தா, ஊட்டுக் கேட்ட எப்பயும் பூட்டித்தான் வெக்க வேண்டிக் கிடக்கு. கேட்டுக்கு முன்னால, போன மாசம் காண் போடுறதுக்கு மடு வெட்டிப் போட்டுட்டுப் போனானுகள். அப்பிடியே கிடக்கு. வெளிய போனா புள்ளெ உழுந்துருவானே…”

அங்குமிங்குமிருந்து வந்து விழும் இப்படியான கதைகளும் விமர்சனங்களும் மீராசாஹிபின் உள்ளத்தை வருத்திப் பயமுறுத்திச் செல்வது வழக்கமாகி விட்டன.

மழை காலத்தில், விறகு சேகரித்து வருகையில் பள்ளங்குழிகளறியாது சைக்கிளுடன் சேர்ந்து கீழே விழுந்து கைகால் உடைந்து மருத்துவமனையில் போய்ப் படுத்து விட்டால், தனது நாளாந்த சிறு வருமானத்தையே நம்பியிருக்கும் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட ஏழைக் குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுவது என்ற கவலையும் அச்சமும் ஒரு பக்கம் இருந்தாலும், அதை விடவும் கோபமும் விரக்தியுமே அவரில் மேலோங்கியிருந்தன. 

அந்தக் கோபத்திற்கும் விரக்திக்கும் காரணம் இல்லாமலில்லை. 

சென்ற வருடத் தேர்தலில் எத்தனை சண்டைகள், குழப்பங்கள், ஏச்சுப் பேச்சுகள்! ஊர்ப்பிரதிநிதியின் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்துவதில், தொழிலைத் துறந்து குடும்பத்தை மறந்து காயம்பட்டுப் பாடுபட்டோர்களில் முக்கியமானவராக மீராசாஹிப் இருந்தார்.

ஊர்ப்பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றுவது என்ற அப்பாவிக் குறிக்கோளைத் தவிர வேறொரு தேவையும் அவரிடம் இருக்கவில்லை என்ற போதிலும், வெற்றி பெற்ற பிறகு, கண்டுகொள்ளாது விட்டுவிட்ட பிரதிநிதியின் அலட்சியம், உள்ளத்தின் மெல்லிய சுவர்களைக் கூரிய முள்ளொன்று குத்திய வலியின் உணர்வைத் தன்னில் ஊன்றியதை அவரால் தவிர்ந்து கொள்ள முடியவில்லை. 

அபிவிருத்தியின் பெயரில் இடம்பெறும் பழிவாங்கல் நடவடிக்கைகள் மற்றும் ஊழல்கள் பற்றிய உரையாடல்கள் அவரை மேலும் வருத்தத்தில் தோய்த்தெடுத்தன.

உயிரைப் பணயம் வைத்தது போல் நின்று, ஊர்ப் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றிக் கொடுத்த தன் முட்டாள்தனத்துக்குத் தண்டனையாக, கழிப்பறையில் நின்று, தன் காற்செருப்பையெடுத்து, யாருமறியா வண்ணம் கன்னத்தில் சில இழுப்புகளை விட்டுக் கொண்ட பிறகும், அவரது குற்றவுணர்வு அடங்கியதாகத் தெரியவில்லை. 

அக்குற்றவுணர்விலிருந்து விடுபட அவருக்கு நான்காண்டுகள் ஆயின. 

அப்போது அவர், அயல் வீடொன்றில் பேரார்வத்துடன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். 

தான் வாக்களிக்காது விட்டதனால்தான் ஊர்ப்பிரதிநிதி தேர்தலில் தோற்றுப் போனார் என அப்போது மீராசாஹிப் எண்ணிக் கொண்டார். 

எங்களூர் எம்பி


“வெண்டாலும் தோத்தாலும் நான் எம்பிதான். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நான் அமைச்சர்தான்”

ஒவ்வொரு தேர்தலிலும் இவ்வாறு நெஞ்சுயர்த்திப் பிரகடனம் செய்வதற்கு ஜிப்ரி மாஸ்டருக்கு எவ்வளவு தன்னம்பிக்கையும் தந்திரமும் இருக்க வேண்டும்.

வார்த்தை ஜாலங்களில் வாக்காளர்களைக் கட்டிப்போடும் வாய்ச்சொல் வீரன், இலக்கியச் செம்மல்களின் இறுமாப்பைத் துடைத்தெறியும் சொற்போர் மன்னன் என்றெல்லாம் புகழப்படும் ஜிப்ரி மாஸ்டருக்கு சிறப்புப் பெயர்களோ ஏராளம்.

அவருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புப் பெயர்களும் அவற்றுக்கான காரணங்களும் பின்வருமாறு:

சோற்று மாடு: நாளின் அதிக நேரத்தை வயிறு புடைக்கச் சாப்பிட்டுப் பெருத்த ஏப்பத்துடன் தூங்குவதிலேயே கழிப்பதனால்.

வள்ளல் பரம்பரை: நூல் வெளியீட்டு விழாக்களில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஐநூறு ரூபா மட்டுமே அன்பளிப்புச் செய்வதனால்.

அடிக்கல் அமைச்சர்: எல்லா அபிவிருத்தி மற்றும் நிர்மாணப் பணிகளையும் அடிக்கல் நட்டு முடித்து வைப்பதனால்.

வெற்றி அறியா வீரன்: எல்லாத் தேர்தலிலும் தோற்பதே வழக்கமென்றாலும், எந்தத் தேர்தலுக்குப் பின்னும் எம்பியாகாது விட்டதில்லை என்பதனால்.

இவை தவிர, குறித்த சந்தர்ப்பமொன்றை அடிப்படையாகக் கொண்டு சூட்டப்பட்ட பண்புப் பெயர்களும் ஏராளமுள்ளன. அவ்வாறு அவருக்கு சூட்டப்பட்ட பெயர்களும் அவற்றுக்கான சந்தர்ப்பங்களும் பின்வருமாறு:

கறார் காரியாலயன்: விபத்திற்குள்ளாகி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒருவரை உடனடியாக கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல ஹெலிகப்டர் வசதி ஒழுங்கு பண்ணித் தருமாறு ஊர் மக்கள் கேட்ட போது, சனி ஞாயிறு விடுமுறை தினங்களில் இப்படியான காரியாலய வேலைகளைப் பார்க்க முடியாது எனக் கை விரித்த சந்தர்ப்பத்தில்.

மண்ணின் மைந்தன்: ஊர் மக்கள் இலகுவாக சேவை பெற்று வந்த மின்சார சபை காரியாலயத்தை ஊரிலிருந்து அப்புறப்படுத்தி தூர இடமொன்றுக்குத் துரத்தியடித்த சந்தர்ப்பத்தில்.

விடுதலைப் போராளி: தாம் எதிர்நோக்கும் புலிகளின் தொல்லை மற்றும் அச்சுறுத்தல் பற்றி முறையிடச் சென்ற ஊர் மக்களுக்கு, ஊரிலிருக்கும் உங்கள் சொத்துகளை வேறிடத்திற்கு நகர்த்துங்கள் என்று முக்கிய ஆலோசனையொன்றை மலர்ந்தருளிய சந்தர்ப்பத்தில்.

காட்டிக் கொடுக்காத கரம்: பழையவர்கள் மற்றும் பங்களிப்புச் செய்தவர்கள் எல்லோரையும் ஓரங்கட்டித் துரத்தியடித்து விட்டு, கட்சியையும் கட்சித் தலைவரையும் தன் கட்டுக்குள் கொணர்ந்த சந்தர்ப்பத்தில்.

நரிக் குரங்கர்: பள்ளிகளில் பாங்கு சொல்ல முடியாது போகும், முஸ்லிம்களுக்கெதிராகவும் போர் தொடங்கும் என்றெல்லாம் யாரைப் பற்றி மக்களை எச்சரித்தாரோ, அவருடன், அவரது தேர்தல் வெற்றிக்குப் பின் கூட்டணி சேர்ந்து அமைச்சராகி அதி வேக காரொன்றை ஊருக்குள் கொணர்ந்த சந்தர்ப்பத்தில்.

ஜிப்ரி மாஸ்டரின் புகழும் கீர்த்தியும் சிறுகதைகளிலோ நாவல்களிலோ அடங்கிடாத காட்டாற்று வெள்ளம் போன்றவை என்பது உண்மைதான். எனினும், அவரது பழங்காலத் தோழர்களுள் ஒருவரின் பின்வரும் கூற்று இவ்வுண்மையை மறுத்து நிற்கின்றது:

“மேடைகளில் வீர முழக்கமிடுவது, கட்டடங்களுக்கு அடிக்கல் நடுவது, உண்டு நிரப்பித் தூங்கிக் கழிப்பது இவற்றைத் தவிர அவருக்கு வேறென்ன தெரியும்!”.


நண்பன்


“ஹலோ முனாஸ்! நோட்டிஸ் ரெடி பண்ணிட்டியா?”

“இல்லடா மச்சான், இன்னும் கொஞ்சம் இருக்கு. முடிஞ்சவுடன நானே உன்னக் கூப்பிர்ரன்”

“நாளைக்கு ஜும்ஆக்கு முதல்ல இஷூ பண்ணணுண்டா. அப்பதான் ஜும்ஆக்கு வாறவங்களுக்கு வாய்க்கு அவல் போட்ட மாதிரியிருக்கும், விஷயம் சிம்பிளா பத்திப் பரவிடும்”

“சரிடா, எப்படியும் இண்டைக்கு இஷாவுக்குப் புறவு கொண்டாந்து தாறதுக்கு ட்ரை பண்ணுறன்”

இஷாவுக்குப் பிறகு, கரீமின் வீட்டிலிருந்தான் முனாஸ்.

ஃபோட்டோ கொப்பி பண்ணப்பட்ட ஆயிரம் நோட்டிஸ்கள் அடங்கிய பொதியொன்று அவனது கையிலிருந்தது. அதிலிருந்து ஒன்றை உருவியெடுத்து வாசித்துப் பார்த்த கரீமின் முகத்தில் திருப்திப் புன்னகை பரவிக் கமழ்ந்தது.

“முனாஸ்! கை குடு மச்சான். நோட்டிஸ் பிரிபெயார் பண்றத்தில உன்ன அடிக்க ஆளே இல்லடா”

“புள்ளெட பேரையும் போட்டிருக்கிறதனால, விஷயம் கன்பாமெண்டு எல்லாரும் நினைச்சிக்குவாங்க. மாஸ்டர் வசமா மாட்டிக்குவாரு. பொம்பள விஷயந்தான ஒரால அடிச்சி விழுத்தாட்ட சுப்பர் ஆயுதம்"

"பொலிடிசியன் பின்னால் திரியிறத்தால பெரிய ஆளெண்டு நினப்பு அவருக்கு. அதுக்குத்தான் இந்த ஆப்பு”

“சரி அத விடு கரீம், எப்பிடி இத இஷூ பண்றது? ஏதாவது ஐடியா வெச்சிருக்கியா?”

“ரெண்டு பெர செட் பண்ணியிருக்கன். இரவைக்கு 12 மணிக்குப் புறவு வெளிக்கிட்டு, ஊர்ல எல்லா ரோட்லயும், பூத்தூவுற மாதிரி போட்டுட்டு வந்திருவானுகள். அவ்வளவுதான். நாளெக்கு காலைல பத்தியெரியும். மாஸ்டர்ர மானம் கப்பலேறும். அதுக்குப் புறவு பாப்பமே அவர்ர பொலிடிகல் பவர”

*   *   *    *    *

“என்ன சேர், ரெண்டு நாளா ஆளக் காணல்ல? நீங்க வராட்டி ஸ்கூலே வெறிச்சோடிப் போன மாதிரியிருக்கு”

“மினிஸ்டர்ர ஃபங்ஷன் ஒண்டு இருந்த சேர். அதில கொஞ்சம் வேலயாப் பெய்த்து. அதுதான் ரெண்டு நாளா வரல்ல. அதிருக்க, நேத்து ஸ்டாஃப் மீட்டிங்ல என்ன முடிவெடுத்த?”

“ஒண்டும் உருப்படியா இல்ல சேர். உங்களத்தான் அக்டிங் போடணுமெண்டு நானும் கரீம் சேரும் எவ்வளவோ சொல்லிப் பாத்தம். ஒருத்தரும் சப்போர்ட் பண்ணல்ல”

“சரி விடுங்க சேர். எத்தினயப் பாத்திட்டம். இண்டைக்கும் என்னமோ நோட்ஸ் அடிச்சிருக்கானுகளாம். வேல இல்லாதவனுகள். உங்களப் போல கொஞ்சப் பேராவது எனக்கு சப்போர்ட்டா இருக்கிறீங்களே, அது போதும். ஓகே முனாஸ் சேர், பெல்லடிச்சி மிச்ச நேரமாயிட்டு, கிளாசுக்குப் போவமா?”

தொழிலதிபர்


“சந்திரமண்டல வீதி: பள்ளங்குழிகளற்ற இரும்புப் பாதை”

எங்களது ஊரின் முக்கிய வீதியொன்றுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் சூட்டியிருந்த பட்டப்பெயர் இது.

ஊரின் எல்லா வீதிகளுக்கும் இப்பெயர்ப்பலகை கனகச்சிதமாகப் பொருந்தியிருந்த காலமொன்றிருந்தது.

சல்மான் ஹாஜி, அந்தக் காலப்பகுதியில், மாட்டு வண்டில் வைத்து, லோடு ஏற்றிக் கொடுத்து நாள் கூலி பெற்றுக் கொண்டிருந்தார்.

இரண்டடுக்கு மாடி வீடும், ட்ரக்டர் மிசினும், மோட்டார் சைக்கிளுமாகத் திரியும் அவரது இன்றைய செழிப்புக்கு, ஊர்ப்பிரதிநிதித்துவம் ஒதுக்கிய வீதி அபிவிருத்தி நிதிகளும் முக்கிய காரணம்.

கொன்ட்ரக் வேலைகளைத் தவிர்த்து, வேறெந்தப் பெரிய தொழிலையும் அவர் செய்யவில்லையாயினும், தொழிலதிபர் என்ற அடைமொழியை தன் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளுமாறு, நூல் வெளியீட்டு விழாக்களில் முதற்பிரதி பெறவும், பாடசாலை பரிசளிப்பு விழாக்களிலும் கடைதிறப்பு விழாக்களிலும் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவும் அழைக்க வருபவர்களை அவர் கட்டாயப்படுத்துவார். அவர், கவருக்குள் வைத்துக் கொடுக்கும் ஆயிரம் ரெண்டாயிரம் ரூபாய்களுக்காக இந்தக் கொடுமைகளையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டிய தலையெழுத்து அவர்களுக்கு.

கார்ப்பட் ரோடு போடும் பிரதான வீதிகளை விடுத்து, கொங்க்ரீட் ரோடு போடும் உள்வீதிகளையே சல்மான் ஹாஜி கொன்ட்ரக்டாக எடுத்துக் கொள்ள முனைவார். கமிஷன் என்ற பெயரில் ஊர்ப்பிரதிநிதிக்கும் அரசாங்க நிருவாகிகளுக்கும் கணிசமான தொகையொன்றைப் படியளப்பதனால், கொன்ட்ரக் பணிகளில் அவர் புரியும் தவறுகள் பாதிக்கப்படும் மக்கள் தவிர வேறெவராலும் கண்டுகொள்ளப்படுவதில்லை.

“போன கிழமதான் போட்ட ரோடு, இப்பிடி இடிஞ்சி கிடக்குதே” என்று யாரேனும் கேட்டால், “எவனோ, லோடு ஏத்தின மாட்டு வண்டிலக் கொண்டு போயிருக்கான். அதுக்கு நான் பழியா?” என்பார்.

“உங்கட கொங்க்ரீட் ரோட்ல மழத்தண்ணி தேங்கி நிக்குதே, வழிஞ்சி ஓடுதில்லியே” எனக் கேட்டால், “மழ கொஞ்சம் உட்டு உட்டுப் பெஞ்சாத்தானே தண்ணி ஓடி முடிய வசதியாயிருக்கும். நான் என்ன பண்ண?” என்பார்.

“நீங்க போட்ட ரோட்ல பள்ளங்குழிகளாக் கிடாக்குதே” எனக் கேட்டால், “கம்பனிக்காரன் சீமெந்தில கலப்படம் பண்ணியிருக்கான்” எனத் திட்டுவார்.

அவரது உண்மைகளெல்லாம் மக்களுக்குப் புரிந்து போனதில், மக்கள் அதிரடி மாற்றமொன்றை ஏற்படுத்தினர்.

எனினும், பதவியிழந்து ஊருக்குள் எட்டியும் பார்க்காது தலைநகரில் படுத்துக் கிடக்கும் முன்னாள் ஊர்ப்பிரதிநிதியின் தோல்வியில் தனக்கு எவ்விதப் பங்குமில்லையென சல்மான் ஹாஜி இப்போதும் சொல்லித் திரிகின்றார்.


ஊர்க்காவலன்


ஆசாத் கொதித்துக் கொண்டிருந்தான். 

சிகரட், கஞ்சா, பியர் எதன் போதும் இவ்வளவு கொடூரச் சிவப்பு அவனது கண்களில் மின்னியதில்லை.

வாரமொரு இரவை கமலாவின் அணைப்பில் கழித்து வந்த கடந்த ஒரு மாத சுகத்தின் கிறக்கம் முற்றாக அவனை விட்டும் தொலைந்து போயிருந்தன. 

அச்சம் கலந்த மலைப்புடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தனர் அவனது கூட்டாளிகள்.

இரவுக் காவலின் போது ஊர்க்கோழிகள் பல சத்தமின்றி அறுந்து பொரிந்து அவன் கூட்டும் இரவுப் பார்ட்டிகளை அலங்கரித்திருக்கின்றன.

எந்தவொரு இறைச்சியிலும் இல்லாத தனி ருசி, கள்ள மாட்டு இறைச்சியில் மட்டும் உள்ளதென்று அவன் கண்டுபிடித்துச் சொன்ன போது, சுற்றியிருந்தோர் கைதட்டி வரவேற்றிருக்கின்றார்கள். 

அவ்வாறு கைதட்டியோரை வைத்துக் கழகமொன்றை நிறுவி, அதற்குத் தலைவனாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டபின், ஊரின் முக்கிய புள்ளிகளுள் ஒருவனாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவன், ஆசாத். 

வெளிநாடுகளுக்குக் கணவன்மாரை அனுப்பி விட்டுத் தனிமையில் வீட்டிலிருக்கும் பெண்களை மலர்த்துவதில் அவன் கண்டுள்ள வெற்றிகளை அவனது கூட்டாளிமார் இன்றும் மலைப்புடன் சிலாகிப்பர். 

செருப்பையோ, தும்புத்தடியையோ தூக்கிக் காண்பித்து முறைத்து, தனது கொழுத்த சட்டைப்பையைக் கவனிக்கத் தவறும் முட்டாள் பெண்கள் சிலரின் தவறுகளை தனக்கும் மட்டும் தெரிந்த இரகசியமாக வைத்திருந்ததனால், கூட்டாளிகள் மத்தியில் தனது இமேஜைப் பாதுகாத்துக் கொள்வதில் நல்ல வெற்றி பெற்றிருந்தான் ஆசாத். 

இப்பேற்பட்ட தமது தலைவன் என்றுமில்லாதவாறு இன்று, அடிபட்ட புலியாக உறுமிக் கொதித்துக் கொண்டிருப்பதன் காரணம் புரியாது திகைத்தனர் அவனது கூட்டாளிகள். 

"கியாஸ்..!! ஒரு பொடிப் பயல். என்ன ஓவர் டேக் பண்ணிட்டாண்டா...."

குசுகுசுப்புகளுக்குப் பின் கியாஸ் யாரென அடையாளங் காணப்பட்ட திருப்தியில் மீண்டும் தமது தலைவனை நோக்கினர் கூட்டாளிகள்.

"எனக்குத் தெரியாமப் பெய்த்தேடா...!"

"கமலாட வீட்டுக்கு அடுத்த ரோட்ல. அவள்ற பேரு என்னமோ சுகுணாவாம். அவளுக்கு வேலயக் குடுத்துட்டாண்டா இவன்...."

எல்லோர் முகத்திலும் ஆச்சரியம் கலந்த வெளிச்சமொன்று தோன்றிப் பரவிற்று.

"அவன சும்மா உடக்கூடாது. பள்ளித் தலைவர்ட்ட செல்லி, அவனெயும் அவளெயும் கூப்புட்டு விசாரிக்கணும், ரெண்டு பேருக்கும் கலியாணம் பண்ணி வெக்கணும். நம்மட கொன்ட்ரோல்ல இருக்கிற இந்த ஏரியாவுல நமக்குத் தெரியாம ஒரு பிழ நடந்திருக்கு. பாத்துட்டு சும்மா இருக்கலாமா?"

ஆசாதின் கொதிப்பு, கொஞ்சம் கொஞ்சமாக அவனது கழக உறுப்பினர்களின் நரம்புகளில் உசுப்பேறத் தொடங்கிற்று.

--------------------

பிற்குறிப்பு: இரண்டு நாட்களின் பின், புதிதாத இஸ்லாத்துக்கு வந்த ரஹீமா என்கிற சுகுணாவுக்கும், முகத்தில் இரத்தக் காயங்களுடனிருந்த கியாஸுக்கும் பள்ளித்தலைவர் தலைமையில் திருமணம் இனிதே நடந்தேறியது.

மாப்பிள்ளைத் தொழில்


"அய்யாயிரம் பேருக்கு மாப்புள்ளச் சாப்பாடு தரணும்"

"இருக்கிற ஊட்ட இடிச்சிப் போட்டு அந்த இடத்தில மூணு கட கட்டித் தரணும்"

"பின் வளவுக்குள்ள ரெண்டு மாடி ஊடு கட்டி மாபிள் பதிச்சி ஏசியும் பூட்டித் தரணும்"

"புது செல்போன் ஒண்டும் மடிக்கிற கம்ப்யூட்டர் ஒண்டும் வாங்கித் தரணும்"

"மாப்புள்ளட தங்கச்சிக்கு ஒரு ஊடு கட்டித் தரணும்"

"ஒரு வருஷத்துக்கு மாப்புள்ளெய்க்கு சாப்பாடு குடுக்கணும்"

"இதிவ்வளவுக்கும் சம்மதமெண்டா, எங்கட புள்ளெய உங்களுக்கு மாப்புள்ளெயாத் தாறம்"

*   *    *

"உங்களுக்கு என்ன தகுதி இருக்குதெண்டு நினைச்சிக்கிட்டு எங்கட மாப்புள்ளெயக் கேட்டு வந்திருக்கீங்க?"

"மெயின்ல ஊடும் ஹாட்வெயார் கடெயும் வெச்சிருந்தா பெரியாக்களெண்டு நெனப்பாக்கும்"

*    *    *

"இப்பிடி மாசாலமா கத்தினா நாங்க மயங்கிடுவம் எண்டு நினெச்சீங்களோ?"

"சும்மா பொழுது போக்கு மாதிரி எங்கட புள்ள உங்கட ஊட்ட வந்து உங்கட புள்ளெக்கிட்ட கதெச்சிப் பழகியிருப்பாரு. அதுக்காக அள்ளிப் புடிச்சிக்கிட்டு கலியாணங் கேட்டு வந்துருவீங்களா?"

*    *    *

"மாப்புள்ள என்ன வேல பாக்காருடி?"

"ஆறு மாசத்துக்கு முதல்ல, மௌலவி டீச்சிங் குடுத்தாங்கல்லா, அதில வேல கிடெச்சி ஸ்கூல்ல மாஸ்டரா இருக்காராம்"

"பெரிய பணக்காரக் குடும்பமோ?"

"ச்சேச்சே... இருக்கிறதுக்கு சொந்தமா ஊடு கூட இல்ல. காலமெல்லாம் வாடக ஊடுதான்"

"அப்ப, ஊர்ல நல்ல கௌரவமான குடும்பமா?"

"தோண்டிப் பாத்தா, ஊரே நாறிப் போகும், அவ்வளவு பீத்தல்"

"அப்ப என்னத்துக்கு ராத்தா, மாப்புள்ள கேட்டு இப்பிடி அலையிறா?"

"என்ன செய்ய? மகள் ஆசப்பட்டுட்டே எண்டுதான் கஷ்டப்பர்ராவாக்கும். அவ்வளவுக்கு கதெச்சியே அவட புள்ளய மயக்கிப் போட்டான் போலக்கிடக்கு"

*     *     *

"அவரா? என்னையும் கலியாணங் கேட்டு வந்ததான! வயசு கூட, ஆள் கறுப்பு, மோசமான குடும்பமெண்டுதான் நான் வாணாண்ட. இப்ப என்ட மகளக் கேட்டு வந்தா, குடுப்பனா?"

*     *     *

"இந்த நாத்தப் புடிச்ச வாய வெச்சிக்கிட்டு எங்கட மகளயா கலியாணங் கேட்டு வாறாய்? போடா பேயன்..!"

*     *     *

"டேய், வாங்கடோவ்...! அந்தா போறாண்டா மாஸ்டர் பேயன்... ஹே.... ஹே.... ஹூ.... ஹூ...."

Twitter Bird Gadget