குடும்ப வாழ்க்கை என்பது வெற்றி தோல்வி என்ற விவகாரங்களையோ வீரன்-கோழை என்ற விவாதங்களையோ நிர்ணயிக்கும் யுத்த களமல்ல. மாறாக, உள்ளங்களால் இணைந்து ஒற்றுமைப்பட்டு காலங்களை மகிழ்வாக நகர்த்துவதற்கான சிறந்த வாழ்க்கைத் திட்டமாகும்.
எனவே, குடும்ப விவகாரங்களின் நடைமுறைகளின் போது, அவ்வப்போது எழுகின்ற சிறுசிறு பிரச்சினைகளுக்கு கணவன்-மனைவி இருவரும் தமக்கிடையிலான புரிந்துணர்வுடனும், விட்டுக் கொடுப்புடனும் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அப்போதே அக்குடும்பத்தில் சந்தோஷமும் திருப்தியும் நிலைபெற்று அன்பும் பாசமும் தழைத்தோங்கும்.
ஒரு குடும்பத்தைப் பொறுத்தவரை, அதன் சந்தோஷமான அல்லது கவலையான நிலைகளின் தோற்றத்தில் வீட்டுத் தலைவியின் பங்களிப்பே பிரதான காரணமாக அமைகின்றது.
எனவே வீட்டுத் தலைவி சிறந்த நல்லொழுக்கப் பண்புகளையும் மார்க்கத்துக்கு ஒத்திசைவான இயல்புகளையும் கொண்டிருக்க வேண்டியது இன்றியமையாததாகும். வீட்டுத் தலைவியர் எப்போதும் இவ் உண்மை நிலையை உணர்ந்து செயற்பட முன்வர வேண்டும்.
பெண்கள் எச்சந்தர்ப்பத்திலும் தமது கணவர்களோடு சண்டையிட்டு அதில் தாம் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணி விடக் கூடாது. தம்பதியரிருவரிடையே வெற்றி - தோல்வி என்ற வேறுபாடோ, வீரன் - கோழை என்ற உயர்வு தாழ்வோ கிடையாது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். இத்தன்மையானது ஆண்கள் தமது கருத்தில் மட்டுமே பிடிவாதமாக இருக்கும் நிலையிலிருந்து தளர்வை ஏற்படுத்தி, இருவருக்குமிடையே சுமுகமான நிலைக்கு வழிவகுக்கும்.
பெண்களுக்கு, தமது கணவருடன் ஏதேனும் பிரச்சினைகள் நேர்ந்தால் நடுநிலையாகவும் நியாயமாகவும் நின்று அவற்றுக்குத் தீர்வு காண முயற்சிக்க வேண்டும். எல்லா சந்தர்ப்பங்களிலும் நியாயம் ஒருவர் பக்கம் இருக்காது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே, பெண்கள் தமது கணவரின் அபிப்பிராயத்தை மரியாதையுடன் செவிமடுக்க வேண்டும். அவ்வாறே ஆண்களும் தமது மனைவியரின் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
அதிகமாக, குறைகளையே கண்டு அவற்றைப் பற்றி முறையீடு செய்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர்க்குரிய சுயகௌரவம், மரியாதை என்பன உண்டு. அவற்றில் பாதிப்புகள் ஏற்பட்டு விடாது பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். பிரச்சினைகளை பெரிதுபடுத்தலாகாது. ஏனெனில், இவ்வாறு பெரிதுபடுத்துவதே வீணான பல பிரச்சினைகளுக்குக் காரணமாகி விடுகின்றது.
பெண்கள் தமது கணவர்களின் நடைமுறையில் மாற்றத்தைக் கண்டால், தமது கணவர் தம் மீது வெறுப்பாக இருக்கின்றார் என்று திடீர் எண்ணம் கொண்டு விடலாகாது. சிலவேளை, வேலைக்களைப்பு, சிறுநோய்கள் என்பனவும் இத்தகைய நடைமுறை மாற்றங்களுக்குக் காரணமாக அமையலாம். அதுபற்றி பவ்யமாகவும் அன்பாகவும் விசாரித்தறிய வேண்டும்.
பெண்கள் தமது கணவருடன் சூடான விவாதங்களில் ஈடுபடுவது கூடாது. அவ்வாறு ஈடுபடுவது அவர்களுக்கிடையே மனக்கசப்பையும் விரிசலையும் ஏற்படுத்தி விடும்.
அவசியமாக விவாதிக்க வேண்டிய விடயம் எனக் கண்டால் மாத்திரம் அவை பற்றி மிக அமைதியாகவும் நிதானமாகவும் விவாதித்துத் தீர்வு காண்பது முன்யோசனையுள்ள நல்ல மனைவியின் பண்பாக இருக்கும்.
February 2003
2 comments:
You have put best information for husband and wife
இந்தக் கருத்துக்கள் காலத்தின் தேவை அய்யா. உமது பணி தொடர நல் வாழ்த்துக்கள்.
Post a Comment