Friday, March 18, 2011

ஆற்றங்கரை

காரை விட்டுக் கீழே இறங்கிய போது வயற்பரப்பின் சில்லென்ற காற்று முகத்திலறைந்து அவனை வரவேற்றது. கண்களை மூடி, சுவாசத்தை உள்ளிழுத்து, அந்த சுகந்தத்தை மனதுக்குள் நிரப்பிக் கொண்டே நடக்க ஆரம்பித்தான்.

சிறுபோக வேளாண்மைக் காலமாகையால், பார்வைக்கெட்டிய தூர மெங்கும் பச்சைப் பசேலென்ற நெற்கதிர்களின் சிருங்காரத் தோற்றம் கண்களை நிறைத்தது. ஆற்றின் புறத்தேயிருந்து எழுந்த காற்றின் வீச்சுக்கிசைந்து, அநாயாசமாகத் தலையசைப்பதான நெற்கதிர்களின் ரம்மியத் தோற்றம், மனதை இதமாக வருடிக்கொடுத்தது. தலைக்கேசத்தைக் கலைத்து விட்டுச் செல்லும் வேகக்காற்றை செல்லமாகக் கடிந்து கொண்டே, வரப்பில் கால் பதித்தான்.

புற்கள் படர்ந்திருந்த அந்த உயர்ந்த வரப்புகளில், சறுகி விடாதவாறு, மிக அவதானமாக கால்களை முன்வைத்து அழுத்தி நடந்த போது, இரண்டாம் வகுப்பில் படித்த ஒளவைப் பாட்டியின் ‘வரப்புயர...’ பாடல் நினைவுக்கு வந்து உள்ளத்தை ஊடறுத்து உவகையூட்டிச் சென்றது.

ஒரு தேர்ந்த விவசாயியினது அற்புதக் கைவண்ணம் அந்த வரப்புகளின் கட்டுக்கோப்பிலும், பரிமாணத்திலும் கமகமப்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.



கதிர்களின் உயர் விளைச்சலிலும், களைகளின் தாக்குதலிலிருந்து அவை பாதுகாக்கப்படுவதிலும், வரப்புகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. சமயத்தில் விவசாயிகளின் உயிர்களைக் காப்பாற்றுவதும் இந்த வரப்புகள்தான். தானும் உயர்ந்து நின்று தன்னை நம்பியிருக்கும் விவசாயியையும் உயரத்தூக்கி விடும் ஒப்பற்ற குணவியல்பு இந்த வரப்புகளின் பூர்வீகச் சொத்து.

சில மனிதர்களைப் போன்று, நம்பி வந்தவரைக் குப்புறப் படுக்கப்போட்டு விட்டு, அவர்கள் மீதேயேறி தம்முயர்வுக்கு எத்தனிக்கும் சுய நலத்தன்மையிலிருந்து முற்றிலும் ஒதுங்கி விட்டுள்ள அந்த உயர்ந்த வரப்புகளை அவன் மனதுக்குள் மெச்சிக் கொண்டான்.


சிந்தித்துக் கொண்டே நடந்ததில், முன்வைக்கப்பட்ட கால் சற்றுப் பிசகி விடவே, வரப்பின் விளிம்போரங்களில் காய்ந்து இறுக்கமின்றிக் கிடந்த சொரசொரப்பான மண், கீழ் நோக்கிச் சரிந்து, சிறு சரசரப்பை ஏற்படுத்திற்று.

அந்த சப்தத்தில், வரப்பினடியில் ஒளிந்திருந்து இரை தேடிக்கொண்டிருந்த சிறு குருவியொன்று கீச்சிட்டுக் கொண்டே விர்ரென மேலெழுந்து பறந்து போனது. பிசகிய காலை சரியாக வைத்துக்கொண்டே கீழே சரிந்து கிடந்த மண்ணை அவன் பரிதாபத்துடன் நோக்கினான்.

தாம் சார்ந்துள்ள கொள்கையில் எவ்வித இலட்சியமும், பிடிப்புமற்று அசமந்தப் போக்குடனிருக்கும் சில மனிதர்களை ஞாபகப்படுத்திய அம்மண்ணை அதன் பாணியிலேயே அலட்சியப்படுத்திவிட்டு தொடர்ந்து நடந்தான்.

வயற்பரப்பைக் கடந்து வந்த போது, ஹோவென்ற இரைச்சலுடன் சிறு அலையடித்துக் கொண்டிருந்த அந்த ஆற்றங்கரை, அவனைத் தன் உஷ்ணக் காற்றால் தழுவி வரவேற்றது. உள்ளத்தில் உணர்ச்சி நரம்புகள் கொந்தளிக்க, கண்ணுக்கெட்டிய தூரம் வரையும் அகன்று கிடந்த அந்த நீல நிற நீர்ப்பரப்பை ஆதுரமாய் அவன் தன் பார்வைக்குள் அள்ளிப் பருகினான்.

மிக நீண்ட காலமான எதிர்பார்ப்பை எய்து விட்ட உணர்ச்சியின் லயிப்பு அவனது முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது. அந்த ஆற்றங்கரை அவனது வாழ்வில் என்றுமே மறக்க முடியா வண்ணம் அழுந்திப் பதிந்து விட்ட பால்ய வயது நினைவுச்சின்னம்.

கடந்து விட்ட பதினைந்து வருடங்களில், எவ்வித மாற்றங்களுக்கும் உட்பட்டு விடாமல், அதே இரைச்சலுடனும், அதே நீர்ப்பரப்புடனும் ‘நான் நானே’ என்ற சுயகௌரவத் தோற்றத்துடனும் நீண்டு கிடந்த அந்த ஆற்றைக் கண்ணுற்றபோது, இயற்கைகளுக்கிருக்கும் தன்மானத்தையும் சுய மரியாதையையும் எண்ணி உதட்டைப் பிதுக்கி, புருவங்களை நெறித்து, கண்களில் வியப்புக் காட்டினான் அவன்.

சீரான இடைவெளி விட்டு பெரிதும், சிறிதுமாக கரை நோக்கி வந்து செல்லும் அலைகளையும் அவற்றின் முதுகிலேறியவாறு ஓசிப்பயணம் செய்யும் வெண் நுரைகளின் அழகையும் ரசித்தவாறு முன்னால் விரிந்து கிடந்த புல்வெளியில், கால்களைப் பரப்பிக் கொண்டே சௌகரியமாய் அமர்ந்தான்.

பெரிதாக வருபவை ஆணலைகள் என்றும், சிறிதாக வருபவை பெண்ணலைகள் என்றும், அவ்விரண்டும் ஒன்றையன்று சந்திக்காது என்றும், எப்போது சந்திக்கின்றதோ, அப்போது உலகம் அழிந்து விடும் என்றும் சிறு வயதில் தனக்கு அடையாளப்படுத்தப்பட்டதை நினைவு கூர்ந்த போது, அவனது உதட்டோரத்தில் கேலிச்சிரிப்பொன்று பிரசவமாகித் துள்ளியது.

அவனது ஊரின் நான்கு முனைகளில் ஒன்றான அந்த ஆற்றங்கரை, பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவருக்கும் நன்கு பரிச்சயமான ஒன்றாகத் திகழ்ந்தது.

அதன் எதிர்முனையான கடற்கரை, போராளிப் பொடியன்மாரின் கட்டுப்பாட்டில் இருந்ததனால், ஊர் மக்களில் பெரும்பாலோர் தம் பொழுதுபோக்கார்வத்தை அவ் ஆற்றங்கரையின் பக்கமே திருப்பி விட்டிருந்தனர்.

சாதாரண மீனவர்களின் தொழில் தளமாகவும், சிறுவர்களின் நீச்சல் தடாகமாகவும் பொழுது போக்குவோரின் நீர்ப்பயணஸ்தலமாகவும், வறியோரின் மலசல கூடமாகவும் விளங்கிய அது, சில சட்ட விரோதச் செயல்களுக்கான மறைப்பிடமாகவும் கூடத் திகழ்ந்தது.

அந்த ஆற்றங்கரையும் அதன் புல்வெளிகளும்தான் அன்று பெரும்பாலும் அவனது பொழுதுபோக்கிடமாக இருந்தன. அப்போது அவனுக்குப் பத்து வயதிருக்கும். ஆற்றங்கரைக்குப் போகக்கூடாது என்பது அவனது உம்மா வாப்பாவின் கண்டிப்பான கட்டளை. அநியாயமாக மூழ்கிப் போய்விடுவானே என்ற நியாயமான கவலை அவர்களுக்கு.

அதனால், விளையாடச் செல்வதாகக் கூறிக்கொண்டு, கூட்டாளிமார்களுடன் ஆற்றங்கரைக்குப் புறப்பட்டு விடுவான். சில சமயம் தெரிந்தவர்கள் யாராவது கண்டு விட்டால், வீட்டுக்கு வந்து கதைவாக்கில் ‘தம்பிய நேத்து ஆத்தங்கரயடிய கண்டன’ என்று கூறிவிட குட்டு வெளிப்பட்டு விடும். பிறகென்ன செமத்தியான தர்ம அடி கிடைக்கும்.

வாப்பா கையிலே பிரம்பை எடுத்தாரென்றால், உம்மா வந்து பறிக்கும் வரை அடிப்பதை நிறுத்தவே மாட்டார். அப்படி ஒரு வைராக்கியம் அவருக்கு.

ஆற்றங்கரைக்கு வந்ததும், எல்லோரும் களிசனையும் சேட்டையும் கழட்டி புற்தரையில் போட்டு, காற்றுக்குப் பறந்து விடாதவாறு கல்லொன்றை எடுத்து மேலே பாரமாக வைத்து விட்டு முழு நிர்வாணத்துடன் ஒருவருக்கொருவர் ‘கூய்...’ காட்டிக் கொண்டே தடதடவென்று ஓடிச்சென்று ஆற்றில் குதிப்பார்கள்.

முழமளவு அலையெழும் அந்த மிருதுவான நீர்ப்பரப்பு ஒரு தாயின் வாஞ்சையுடன் அவர்களை வாரியணைத்துத் தழுவிக்கொள்ளும். கால்களை ஊன்றி எழுந்து நிற்கும் போது அடியில் படிந்திருக்கும் பாசிகளின் உரசலில் பாதங்கள் நெளுநெளுக்கும். கூச்சத்தில் உடல் சிலிர்க்கும்.

கலகலவென சிரித்துக் கொண்டே ஒருவனது பட்டப் பெயரை இன்னொருவன் சத்தமிட்டுக் கூறி ஆர்ப்பரித்துக் கொண்டே ஆனந்தமாய்க் குளிப்பார்கள். மூச்சடக்கி மூழ்கி சுழியோடுவார்கள். மேலே வந்து கைகளிரண்டையும் பரப்பி வைத்துக் கொண்டு சடசடவென நீச்சலடிப்பார்கள். பந்தடிப்பதும் கள்ளன்-பொலிஸ் துரத்துவதும் அவர்களுக்குப் பிடித்தமான விளையாட்டுகள்.

சில சமயங்களில், அவர்கள் குளித்துக் கொண்டிருக்கும் போது, அவ்வழியாக தோணிகள் செல்லும். உடனே நீருக்குள் மூழ்கி கல்லொன்றை எடுத்து தோணியில் செல்பவரைக் குறிபார்த்து வேகமாக வீசியெறிந்து விட்டு, சட்டென நீருக்குள் மூழ்கிச் சுழியோடி வேறு பக்கம் சென்று விடுவார்கள்.

வேறு சமயங்களில் தோணிக்கு அருகாமையில் பதுங்கிப் பதுங்கி வந்து, சட்டெனப் பாய்ந்து அதனைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கி விட்டு, மீண்டும் நீருக்குள் மூழ்கி விடுவார்கள்.

அப்படித்தான் ஒரு தடவை தோணியன்றைப் பாய்ந்து பிடித்த போது, அதிலிருந்த ஊசி மூக்குக் கிழவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வரவே துடுப்பையெடுத்து அவனது தலையில் பலமாக ஓங்கி அடித்து விட்டார். தலை விண் விண்ணென்று வலித்தது.

கள்ளக்கிழவா என மனதுக்குள் அவரைக் கறுவிக் கொண்டு கரையேறிய போதுதான் காயம் ஏற்பட்டிருப்பதும் இரத்தம் கசிவதும் தெரிந்தது. பயந்து போனான்.

காயம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தால் ஆற்றங்கரைக்குப் போன விடயமும் தெரிய வந்து விடுமே என்ற பயத்தில், வீட்டுக்கு வந்ததும் ஓடிச்சென்று தொப்பியன்றை எடுத்து அணிந்து கொண்டான்.

ஆனாலும் விஷயம் எப்படியோ கசிந்து விட, பிறகு வாப்பாவிடம் ரயில் தண்டவாளமாய் கைகளில் தழும்பு விட அடி வாங்கியதும், அவரே கூட்டிச்சென்று சுடுதண்ணி டொக்டரிடம் ஊசி போட்டு மருந்து கட்டியதும் சுவையான அனுபவங்கள். உச்சந்தலைக்கு சற்றுக்கீழே இன்னும் அந்தத் தழும்பு ஆதாரமாக இருப்பதை தொட்டுப் பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.

ஆற்றங்கரைக்கு அருகாமையில், சிறுவாய்க்கால்களும் சற்று விசாலமான குட்டைகளும் நீர் நிரம்பிக் காணப்படும். அவைகளில் மீன் பிடிப்பதென்றால் அவர்களுக்கு அலாதியான சந்தோஷம்.

ஆற்றங்கரைக்கு வருவதற்கு முன்னால் தமது வீட்டுக் கிணற்றடிக்குச் சென்று, மண்ணில் புதையுண்டு பாசி படிந்திருக்கும் செங்கற்களைக் கிளறி, அவற்றுள் ஒளிந்திருக்கும் மண் புழுக்களை இலாவகமாக வெளியே இழுத்தெடுத்து ஒரு தாளில் சுற்றியெடுத்துக் கொண்டே புறப்படுவார்கள்.

ஆற்றங்கரைக்கு வந்ததும் மீன் பிடிப்பதற்கான கைங்கரியங்களை இவனே மேற்கொள்வான். கொண்டு வந்த மண் புழுக்களை துண்டு துண்டாகப் பிய்த்தெடுத்து, தூண்டிலில் குத்தி எச்சிலைத் துப்பிய பின், ‘ஹையா...’ என சத்தமிட்டுக் கொண்டே தூண்டிலை நீருக்குள் எறிவான்.

மப்புளியைப் பார்த்து, மீன்கள் கொத்துவதை யூகித்துக் கொள்வான். அவற்றின் இழுப்புக்கு ஏற்ப தூண்டிலை மெல்ல மெல்ல விட்டுக் கொடுத்துக் கொண்டே போய், மப்புளி நீருக்குள் அமிழ்ந்ததும், சட்டென உண்ணி தூண்டிலை வேகமாக வெளியே இழுத்து விடுவான். எல்லோர் கண்களும் ஆர்வத்துடன் தூண்டிலை நோக்கும். தூண்டிலில் அழகிய மீனொன்று துடித்துக் கொண்டிருக்கும்.

அப்படியே பத்து, பதினைந்து நிமிடங்களில் அவர்கள் கொண்டு செல்லும் நீர் நிரம்பிய சிறிய கோப்பைக்குள் பனையான், ஜப்பான், விரால், சுங்கான், உழுவன் என பல வகை மீன்கள் நிரம்பி விடும்.

தூண்டிலில் சிக்கிய மீனை இலாவகமாகக் கழட்டியெடுப்பதென்பது எல்லோராலும் முடிவதில்லை. அதிலும், சுங்கான், கெழுத்தி மீனென்றால் அவற்றின் தலையிலிருக்கும் முள்ளைக் கண்டு எல்லோரும் பயந்து பின்வாங்கி விடுவார்கள்.

அவன்தான் அதை மிக அநாயாசமாகக் கழட்டியெடுத்து எல்லோரது ஆச்சரியப் பார்வையையும் தன்மேல் பதிய வைப்பான்.

ஆற்றிலே ஒவ்வொரு மீனுக்குமுரிய குறிப்பிட்ட அளவுகளை அவர்கள் இனங்கண்டு வைத்திருந்தனர். கரைக்கு சற்றுத்தள்ளி முழங்காலளவு சென்று போட்டால் நெத்தலி மீனும், இடுப்பளவு சென்று போட்டால் மண்டக் கெழுத்தியும், நெஞ்சளவு சென்று போட்டால் பெரிய கெழுத்தியும் சிக்கும்.

ஆனாலும், பெரும்பாலும் அவர்கள் ஆற்றில் மீன் பிடிப்பதை விரும்புவதில்லை. அவர்கள் பிடிக்கும் மீன்களையெல்லாம் உணவுக்காக அல்லாமல் பொழுதுபோக்கான வளர்ப்புக்காகவே பயன்படுத்தியதனாலும், நெத்தலி கெழுத்தி மீன்களெல்லாம் விரைவிலேயே செத்துப் போய்விடுவதனாலும் குட்டைகளிலும், வாய்க்கால்களிலுமே அவர்கள் அதிகம் மீன் பிடித்தனர்.

ஏனெனில், குட்டையில் வளரும் மீன்கள் மிக்க வலுவானவை. அதிலும், பனையான் மீனென்றால் கேட்கவே வேண்டாம். நீருக்கு வெளியே எடுத்துப் போட்டு மிதி மிதியென மிதித்து அடி அடியென அடித்தாலும் கூட இவகுவில் செத்துவிடாது.

அவனது ஊரில் இருந்த ஒருவனுக்கும் ‘பனையான்’ என்ற கௌரவப் பெயர் கூறப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் காடையனாக சுற்றித்திரிந்த அவன், பிறகு போராளிப் பொடியன்மாருடன் இணைந்து ஊரையே கருவறுத்துத் திரிந்தான்.

அவன் மீது மட்டுமல்லாமல் அவனைப் போன்ற எல்லோர் மீதும் மக்களுக்கு தீராத எரிச்சல் இருந்த போதிலும், அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாத அடக்குமுறைச் சூழ்நிலை நிலவியமையினால் எதுவும் பேச முடியாதிருந்தனர்.

அந்தக் காலப்பகுதியில் பனையான் மட்டுமன்றி அவனைப் போன்ற இன்னும் பல சின்னப் பொடியன்மார்களும் வீட்டில் உம்மா - வாப்பாவுடன் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் சண்டை பிடித்துக் கொண்டு, அல்லது ஊரில் யாரிடமாவது அடி வாங்கிய அவமானத்திற்குப் பழிதீர்க்க வேண்டுமென்று சூளுரைத்துக் கொண்டு போராளிப் பொடியன்மாருடன் சேர்ந்து ஆயுதங்களும், கிரனைட்டுகளுமாய் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ஊரைச் சுற்றி வந்தனர்.

போராளிப் பொடியன்மாருடைய எல்லாப் போராட்டங்களிலும் பனையான் போன்ற சின்ன அப்பாவிப் பொடியன்மாரும் இணைந்து தோளோடு தோள் நின்று பங்கெடுத்து உயிரையும் இழந்திருந்ததனால், அவர்களுக்கு இயக்கத்தில் வெளிப்படையாக நல்ல மதிப்புமிருந்து வந்தது.

எல்லாவற்றையும் தாமே நிர்வகிப்பதாகவும், அதிகாரம் செலுத்துவதாகவும் வெளியில் பாவ்லாக் காட்டிக் கொண்டனர். சிலர் மார்க்க விஷயங்களிலும் தலையிட்டு மௌலவிமாரையும் அடித்து இம்சைப்படுத்தினர்.

அதன்பின், பிரச்சினைகள் ஆரம்பித்த போது முதலில் பலியிடப்பட்டவர்கள் இந்த மூளையற்ற சின்னப் பொடியன்மார்தான். அந்தக் காலப்பகுதியில் ஆயுதங்கள் ஏந்தித் திரிந்த எல்லோருமே ஊர் மக்கள் தம்மை ஒரு ஜனாதிபதியின் நிலையில் வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என எதிர்பார்த்த சம்பந்தமற்ற அதீத பேராசையின் விளைவாய் மக்கள் அடைந்த துயரங்கள் சொல்லொணா. பனையான் இவர்களில் முக்கியமானவனாகத் திகழ்ந்தான்.

சினிமாக்களில் ஹீரோக்களின் முன்னால் வந்து நின்று காட்டமாக சிரிக்கும் பயங்கர வில்லன்களைப் போன்று பனையான், துப்பாக்கியும், கிரனைட்டுமாக வந்து நின்று மக்களை அதட்டுவான்.

பனையானுடைய துப்பாக்கியையும் ஆட்களை அடித்துத் துன்புறுத்தும் அவனுடைய வீரத்தையும் காணும்போது, “இவன் உண்மையிலேயே பனையான்தான்” என்று அவன் அப்போது எண்ணியதுண்டு.

ஆனாலும், திடீரென ஆகாயத்திலும், தரையிலும் தாக்குதல் நடத்திக் கொண்டு இந்திய இராணுவத்தினர் ஊருக்குள் நுழைந்த போது பனையான் உட்பட அனைவரும் சாரனைக் கழட்டியெறிந்து விட்டு ஜட்டியுடன் தலைதெறிக்க ஓடியதாக இவன் கேள்விப்பட்டான்.

எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ஒரு பாரிய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டது போன்ற சுதந்திரப் பூரிப்பின் செழுமை அவர்களது சிரிப்பில் தெளிவாகத் தெரிந்தது.

ஆனால், இவனுக்கோ ஆச்சரியமாக இருந்தது. “ச்சே... பனையான் மீனை கேவலப்படுத்திப் போட்டானுகளே...” என்று அவர்கள் மீது இவனுக்குக் கோபமும் எகிறியது.

இது தவிர, அவர்கள் ஆற்றில் மீன் பிடிப்பதைத் தவிர்த்ததற்கு இன்னுமொரு காரணமும் இருந்தது. வீட்டிலே மலசல கூடம் இல்லாதவர்கள் அதற்கு ஆற்றங்கரையையே பயன்படுத்திக் கொள்வார்கள். முடிந்த பின். ஆற்றோரத்தில் குந்திக் கழுவி விட்டுச் செல்வார்கள்.

தேர்தல் முடிவுகளின் பின், வெற்றி பெற்ற கட்சியின் ஆதரவாளர்களுக்குப் பயந்து ஒளிந்து திரியும் தோல்வியுற்ற கட்சியின் ஆதரவாளர்கள், தமது மலசல கூடமாக மட்டுமன்றி, மறைவான வாழ்விடமாகவும் அந்த ஆற்றங்கரையையே பயன்படுத்தி வந்தனர்.

இடை நடுவில் எதிர்க் கட்சியினர் வந்து விட்டால், கழித்தது பாதி, கழிக்காதது பாதியென சாரனைக் கிளப்பிக் கொண்டே ஓட்டம் பிடிப்பார்கள்.

மனிதர்கள் போதாதென்று மேய்ச்சலுக்கு விடப்படுகின்ற சில மாடுகளும் கூட கரைக்கருவில் வந்தே சாணமிட்டு விட்டுச் செல்லும்.

இவ்வாறாக, ஆற்றங்கரைக்குள் திணிக்கப்படும் இக்கழிவுகளெல்லாம், திண்மக் கட்டியாக அல்லது நீருடன் இணைந்து கலப்புற்றதாக மாறும்போது, ஓரங்களில் கிடக்கும் மீன்கள் அவற்றை தம் உணவாக ஆக்கிக் கொள்ளும்.

ஒரு தடவை தூண்டில் எறிந்து ஆற்றில் அவர்கள் மீன் பிடித்த போது, மண்டக்கெழுத்தி ஒன்று மாட்டியது. மகிழ்வுடன் கரைக்கு வந்து அதன் வாய்க்குள் சிக்கியிருந்த தூண்டிலை மெல்லக் கழட்ட முயன்ற போது, அதன் திடீர்த்தலையசைப்பில் தூண்டில் இறுகி வாய் கிழிந்து போனது.

கிழிந்த வேகத்தில் அப்போதுதான் அது உட்கொண்டிருந்த அந்த உணவு வெளியே சிதறி அவனது கைகளில் அங்குமிங்கும் ஒட்டிக்கொண்ட போது, அருகில் நின்ற நண்பர்கள் “ஈஸ்... பீ…டா...” என்று கத்தியவாறு பதறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

அவனுக்கு வயிற்றைக் குமட்டியது. நாசித்துவாரங்கள் கழன்று விழுமாப்போல் அவ்வளவு நாற்றம். தூண்டிலைத் தூக்கியெறிந்து விட்டு ஓடிச்சென்று குட்டை நீரில் கைகளைக் கழுவியவன், அன்றிலிருந்து ஆற்றில் மீன் பிடிப்பதை அடியோடு நிறுத்தி விட்டான்.

ஆனால், அதில் குளிப்பதைத்தான் விட முடியவில்லை. குளித்துக் கொண்டிருக்கும் போது இந்த நீர்ப்பரப்பின் எல்லாப் பகுதியிலும் அது பரவித்தானே ஒருக்கும் என்ற எண்ணம் தோன்றுகையில் அருவருப்பு வரும். சட்டெனக் கரையேறி விடுவான்.

நோன்பு காலங்கள் வந்தால் அந்த ஆற்றங்கரைதான் அவர்களுக்குப் புகலிடமாக இருக்கும். பொழுதுபோக்குக்காக அல்ல, மறைந்திருந்து சாப்பிட்டுக் கொள்வதற்காக.

அதிகாலையில் ஸஹருக்கு எழும்பும் குடும்பத்தாருடன் இணைந்து தானும் எழுந்து கொள்ளும் அவன், நன்றாக சாப்பிட்டு, “நவைது ஸவ்மகதின்...” சொல்லி விட்டு, மீண்டும் விழுந்து தூங்கி விடுவான்.

விடிந்து வெயில் ஏற ஏற பசி அதிகரிக்கும். கூட்டாளிமாருடன் சேர்ந்து இரகசியமாக பாணும், வாழ்ப்பழங்களும் வாங்கியெடுத்துக் கொண்டு ஆற்றங்கரைக்கு வந்து, திருப்தியாக சாப்பிட்டு முடித்து விட்டு வீடு திரும்புவான். பள்ளிக்குச் சென்று குரான் ஓதி விட்டு வருவதாக வீட்டிலே பொய் சொல்லி நல்ல பேரும் எடுத்துக் கொள்வான். கையில் பணம் இருந்ததாலோ என்னவோ கூட்டாளிமாருக்கு எப்போதும் குறைவேயிருப்பதில்லை. கூட்டாளிமார் மத்தியில் அவன்தான் ஹீரோவாக இருப்பான்.

மாலையானதும் குடும்பத்தாருடன் இணைந்து பேரீத்தம்பழம், கஞ்சி, சர்பத் சகிதம் ஆடம்பரமாக நோன்பைத் திறந்து நல்லபிள்ளை என்று உம்மா-வாப்பாவிடம் பாராட்டும் பெற்றுக் கொள்வான்.

“அந்தப் பொடியனப் பாத்தியா! இந்த சின்ன வயசிலயும் நோம்பெல்லாம் புடிச்சி எவ்ளோ நல்லாருக்குது. நீயும் இருக்கியே, கிடா மாடு மாதிரி. அந்தப் பொடியன்ட மூத்திரத்த எடுத்துக் குடிச்சாத்தாண்டா உனக்கு ரோஷம் வரும்”

அவனது பக்கத்து வீட்டுக்காரி, அவனை உதாரணங்காட்டி தன் மகனை ஆர்ப்பாட்டமான குரலில் திட்ட ஆரம்பிக்கும் போது, அதைக் கேட்கும் இவன் யாருக்கும் தெரியாமல் கொடுப்புக்குள் சிரித்துக் கொள்வான்.

ஓர் இரவு, அந்த ஆற்றங்கரையில் அதிசயமொன்று நிகழ்ந்தது. ஏழு மணிக்குப் பிந்தியதான இரவின் துவக்க நேரத்திலே, ஆற்று அலைகளில் தங்கம் நுரைப்பதாகவும், மணல்களெல்லாம் மின்னிக் கொண்டிருப்பதாகவும் எழுந்த செய்தி காட்டுத்தீ போல் ஊரெங்கும் பரவிற்று. வியப்புக்குள்ளான எல்லோரும் அந்த அதிசயத்தைப் பார்ப்பதற்கென திரள் திரளாக ஆற்றங்கரை நோக்கிப் படையெடுத்தனர். வீட்டைப் பூட்டிக் கொண்டு புறப்பட்ட உம்மா-வாப்பாவுடன் இவனும் இணைந்து கொண்டான்.

அங்கு சென்ற போது, ஊரே அவ்விடத்தில் கூடியிருப்பதைக் கண்டு பிரமித்த அவன், நெருங்கிச் சென்று ஆற்றை நோக்கிய போது, பிரமிப்பினதும் ஆச்சரியத்தினதும் உச்சிக்கே சென்று விட்டான்.

வழமையாக இரவு நேரத்தில் இருளுக்குள் புதையுண்டு, மயானக் கிளர்ச்சியூட்டும் அந்த ஆறு, அன்று அலைக்கு அலை டியூப்லைட் பொருத்தப்பட்ட திருமண வீடு போன்று பளபளவென்று பளிச்சிட்டு கண்களைக் கௌவியது.

அலைகளின் வீச்சில் மேலெழும் நுரைகள் சிறுசிறு மின்குமிழ்களாக வெளிச்சம் பரப்பி ஆச்சரியமூட்டின. நீர் செறிந்த மணற்பரப்பு தங்கக் கற்களாகப் பளபளத்தது.

அதில் கைகளால் அழுத்திக் கீறி விடுகின்ற போது, வெளிச்சக் கோடொன்று தோன்றி நின்று பின் மறைந்து போனது. எல்லோர் முகங்களிலும் வியப்புக் குறிகள் விரவிக் கிடந்தன.

வந்தவர்களில் சிலர் பளபளத்த அந்த நீரையும் மண்ணையும் பாத்திரங்களில் அள்ளியெடுத்துக் கொண்டு செல்லலாயினர். இவனும் எதேச்சையாகக் கொண்டு சென்றிருந்த இரண்டு போத்தல்களில் ஒன்றில் நீரையும், மற்றொன்றில் மண்ணையும் நிரப்பியெடுத்துக் கொண்டு, நீண்ட நேரத்தின் பின் எல்லோருடனும் வீடு வந்து சேர்ந்தான்.

மறுநாள் காலையில் போத்தல்களைத் திறந்து பார்த்த போது, வெறும் ஆற்று மணலும் உப்பு நீருமே இருப்பது கண்டு எல்லோரும் ஏமாந்து போயினர். ‘மனிதர்களைப் போன்று நீயுமா ஏமாற்றத் தொடங்கிவிட்டாய்?’ என்று ஆற்றைப் பார்த்து அவனுக்குக் கேட்கத் தோன்றியது.

அதற்குப் பிறகு வந்த இரவுகளில் அப்படி எதுவும் அதிசயங்கள் நடந்ததாக அவன் அறியவில்லை. ஆனால், ஆறாத ரணமான அந்த சோக நிகழ்வு மட்டும் நடந்தேறியது.

இராணுவத்தினரால் விரட்டப்பட்ட புலிப்படையினர் ஓரிரவு வாள்-துப்பாக்கி சகிதம் ஊருக்குள் புகுந்து உறக்கத்திலிருந்த மக்களை வெட்டியும் சுட்டும் மிகக் கொடூரமாகக் கொன்று குவித்து விட்டுச் சென்றனர்.

மறுநாட்பொழுது உறைந்த இரத்தத் துளிகளிலும், சிதைந்த உடலுறுப்புகளிலுமாக விடிந்த போது, உயிர் தப்பியிருந்த மக்களின் கதறல் ஒலியும், அழுகை வெடிப்பும் விண்ணையே அதிர வைத்தன. நாலா திக்கிலும் இரத்த வீச்சம் நாசியை நிறைத்து, வாழ்வின் மீதான பயங்கரத்தை மனதுக்குள் அழுத்தித் திணித்தது. எல்லோர் முகங்களும் வெம்பாலைப் பாறையாக இறுகிக் கிடந்தன.

“வெட்றத்துக்கு வந்த நாய்கள், தோணில ஏறி, நம்ம ஆத்து வழியாத்தான் வந்திருக்கானுகள்” நடுவீதியில் நின்று கொண்டு ஒருவர் ஆவேசமாகக் கத்திய வார்த்தை, அவனது செவிப்பறைகளில் இடியாக வந்து இறங்கிய போது, அவன் அதிர்ச்சியுற்றுத் துடித்துப் போனான். இந்த மாபெரும் வக்கிரச் செயலுக்கு ஆற்றங்கரையும் உடந்தையா? ஒரு சமூகத்தையே அழிக்க வந்த கொடும்பாவிகளுக்கு இந்த ஆற்றங்கரையும் துணைபோயிருக்கின்றதா?

இரத்த வீச்சம் நிறைந்த அந்த நிஜத்தை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. வாழ்வின் மிருதுவான பகுதிகளையெல்லாம் சுட்டெரித்துக் கரிக்கும் அனற்சாற்றாய் வலிகொடுத்த அந்தக் கொடூர நிகழ்வு ஆறாத காயமாக அவனது உள்மனதில் பதிந்து போயிற்று.

அன்றைய படுகொலை நிகழ்வில் உறவினர்கள் பலருடன், அவனது வகுப்புத்தோழி ஒருத்தியையும் அவன் இழந்து விட்டிருந்தான். உறவினர்களின் இழப்பை விட, நெருக்கமான பழக்கம் கொண்டிருந்த அவளது இழப்பு அவனை வெகுவாகப் பாதித்தது.

பாடங்களில் கெட்டிக்காரியாகவும், ஆசிரியர்கள் மட்டத்தில் நற்பெயரெடுத்தவளாகவும் இருந்த அவளுக்கும் இவனுக்கும்தான் பரீட்சைகளின் போது கடுமையான போட்டி நிலவும். அதனால் அவனையும் அவளையும் இணைத்து நண்பர்கள் கேலி செய்யும் போது இருவருமே உள்ளுக்குள் அதனை ரசித்தாலும், முகத்தில் பொய்க்கோபம் காட்டி நண்பர்களை அடக்குவர்.

அவளையும், இன்னும் பல பெண்களையும் கற்பழித்துக் கொலை செய்துவிட்டதாக ஊரில் பேசிக்கொண்டார்கள். கற்பழிப்பதென்றால் என்னவென்று அப்போது அவனுக்குப் புரியவில்லை. கைகால்களை வெட்டியெறிந்திருப்பார்கள் போலும் என்றெண்ணி போது, அந்த நிகழ்வை மனதுக்குள் கற்பனை செய்து, அதன் பயங்கர வலியுணர்வைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சிந்தனைகள் அறுந்து உடலுதறினான்.

மிகக் கூரான ஈட்டி முனையால் உடலில் துளையிட்டுக் குடைவதான கொடூரத்தனம் உதிர்க்கும் ஆழ்ந்த வலி அவனை நைத்து வருத்திற்று.

அந்த சோகத்திலும் ஆற்றங்கரையின் மீது அவனுக்கு தீராத சீற்றம் தோன்றியது. ஓட்டமும் நடையுமாகச் சென்று ஆற்றங்கரையை வந்தடைந்தான். மூச்சு வாங்கிக் கொண்டே புற்தரையில் கால்பதித்து நிமிர்ந்து நின்று ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த அவ் ஆற்றை உக்கிரமாகப் பார்த்தான்.

“த்தூ.... உன்னில் எவ்ளோ அன்பும் நம்பிக்கயும் வெச்சிருந்தம். இப்பிடி எங்களக் காட்டிக் குடுத்திட்டியே. எங்கட சொந்தக்காரங்களக் கொல்ல வந்த பாவிகள கஷ்டம் இல்லான கரசேத்து உட்டிரிக்கியே. க்கா... த்தூ..”

சத்தமிட்டு அலறிய அவனது குரலில் ஜீவனிருக்கவில்லை. கண்ணீரும் சோகமும் இணைந்து இறுகிக் கிடந்தன.

குனிந்து கற்களைப் பொறுக்கியெடுத்து ஆற்றை நோக்கி ஆவேசமாக வீசியெறிந்தான். அண்மித்துச் சென்று அதனுள்ளே காறித்துப்பினான். கரைக்கு வந்த அலைகளை கால்களால் அடித்துத் துரத்தினான்.

அவனது கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்த் துளிகள், அவனது கன்னத்தினூடாக வழிந்து, கீழே விழுந்து ஆற்று நீருடன் கலந்து சங்கமமாகிப் போயின.

இறுதியாக, ஆழமான ஒரு பார்வை பார்த்து விட்டுத் திரும்பியவன், பின்னர் அந்தப்பக்கம் செல்லவேயில்லை.

நூற்றுக்கும் அதிகமான ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் காவு கொண்டதான அந்த இறுகிய சோக தினம் ‘வெட்டுப்பட்ட நாள்’ என்ற அடையாளப் பெயரோடு அவனது ஊரின் வரலாற்றுச் சரித்திரத்துடன் பிணைந்து போனது.

“ஊர்ல வெட்டுப்படக்குல இவனுக்கு நாலு வயசிருக்கும்”

“போன மாசந்தான் புள்ள குமராயினிச்சிகா. வெட்டுப்படக்குல ரெண்டு மாசக்குழந்த”

“வெட்டுப்பட்ட துண்டுக்குல தம்பிட வாப்பா வெளிநாட்லதான் இருந்தாக”

ஒரு புதிய வருடக்கணக்கென ஞாபகித்துப் பேசுமளவு ஊருக்குள் சகலரதும் உள்ளங்களில் அது ஆறாத ரணமாக அழுந்திப் பதிந்து விட்டது. அந்த நிகழ்வுக்குப் பின், ஆற்றங்கரைக்குச் செல்வதை அவன் முற்றாக வெறுத்து நிறுத்தி விட்டான்.

இனிமேல் தனக்கு அங்கு ஆக வேண்டியது எதுவுமில்லையென்ற அவனது தீர்மானமானது அவனுக்கும் அவ் ஆற்றங்கரைக்கும் இடையில் ஏற்பட்டு விட்டிருந்த விரிசலை மேலும் அகலமுறச் செய்து கொண்டே போயிற்று. ஆனாலும் ஆற்றங்கரையைப் பற்றிய கதைகளும், உரையாடல்களும் அடிக்கடி அவனது காதுகளுக்குள் வந்து விழுந்து உள்ளத்தைப் பிசைய வைக்கும்.

“பொடியன்மாரு ஆத்தங்கரயாலதான் ஊருக்குள்ள வாறானுகளாம்”

“ஆத்தங்கரக்கி சும்மா போறத்துக்கே பயமாயிருக்கிடா”

“ஆத்தங்கரக்கி மீம் புடிக்கப் போனா பொடியன்மாரு தோணியயும், வலயயும் பறிச்சி ஆக்களுக்கு அடிச்சும் அனுப்புறானுகளாம்”

“ஆத்தங்கரக்கி பக்கத்தில நேவிப்பட வந்திரிக்காங்களாம். மண் மூடயெல்லாம் அடுக்கி சென்றி கட்டிரிக்காங்களாம்”

ஊருக்குள் நிலவிய அந்தக் கதைகளைக் கேட்கும் போதெல்லாம், இன்பம் எக்களிக்கும் பூங்காவாக இருந்த தன் பிரியமிகு ஆற்றங்கரை அச்சபூமியாக மாறிப்போய் விட்டதை உணர்ந்து அவன் உள்ளுக்குள் புழுங்கிக் குமுறினான். கண்ணீரையும், கவலையையும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.

சிந்தனைகளை வேறு திசைகளில் திருப்ப முயன்ற போதிலும், ஆற்றங்கரையில் தென்றலை நுகர்ந்திருந்த பால்யத்தின் பசுமை நினைவுகள் முரட்டு அதிர்வுகளாய்க் கிளர்ந்து அடிக்கடி அவனது உள்ளத்தை வலிக்கச் செய்தன.

ஆயிற்று! காலவோட்டத்தின் வேகத்தை ஆச்சரியப்பட்டுக் கொண்டே பதினைந்து வருடங்களைக் கடந்து வந்தாயிற்று.

இந்தப் பதினைந்து வருடங்களில், அவன் படித்துப் பட்டம் பெற்று, கௌரவமான அரச உத்தியோகத்தில் இணைந்து, அயலூரில் காதலித்த பெண்ணை திருமனமும் செய்து குடும்பஸ்தனாகவும் ஆகிவிட்டிருந்தான்.

உறவினர்களைப் பார்த்துச் செல்வதற்காக மனைவியுடன் ஊர் வந்த போது, திடீரென ஆற்றங்கரையைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் உந்தவே நீண்ட போராட்டத்தின் பின், மனதின் பிடிவாதத்துக்குக் கட்டுப்பட்டவனாகி, காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

நீர் முட்டிய கணைகளை கசக்கி விட்டுக் கொண்டே சிந்தனைகளிலிருந்து அகன்று ஆற்றை ஆழ்ந்து நோக்கினான் அவன். அதே முழமளவு அலையுடனும், இரைச்சலுடனும் அது நுரை கக்கிக் கொண்டிருந்தது.

அது தன் மக்களுக்குச் செய்து விட்ட துரோகத்தையும் இப்போதைய சாதுத்தோற்றத்தையும் பார்த்த போது அவனுக்கு உள்ளம் முழுவதும் அனலாகி எரிச்சலெடுத்தது. சிவந்திருந்த கண்களில் கோபம் காட்டினான்.

இந்த ஆற்றங்கரையைப் போலவே, செய்வதையும் செய்து விட்டு, பொறுப்பை வேறு பக்கம் தூக்கிப் போட்டு விட்டு கல்லுளி மங்கனாய்ப் படுத்துக் கிடக்கும் ரோஷமற்ற மனிதர்களைப் பற்றி அவனது சிந்தனை அசை போட்டது. அத்தகைய இயல்புடையோரே இன்று சமாதானம் பற்றியும், ஐக்கியம் பற்றியும் பேசுவதை நினைத்த போது அவனுக்கு சிரிப்பாக வந்தது.

ஆனாலும் அவன் தெளிவாக இருந்தான். இந்த ஆற்றங்கரை தன் மக்களுக்கு செய்து விட்ட துரோகத்தை ஒப்புக்கொண்டு மற்றொரு முறை இதனைச் செய்ய மாட்டேன் என உறுதி கூறினாலும் கூட அதனை ஏற்றுக்கொள்ள அவன் தயாராக இல்லை.

ஏனெனில், இன்னொரு துரோகத்தைத் தாங்கிக் கொள்ளும் மனோபக்குவமும், பொறுமையும் தனக்கில்லையென்பதை அவன் தெளிவாகவே அறிந்திருந்தான். அவனது வயிற்றின் அடியிலிருந்து ஆழ்ந்த பெருமூச்சொன்று உற்பத்தியாகி ஆசுவாசமாக வெளிப்பட்டு காற்றுடன் கலந்து கரைந்து போனது.

நீண்ட நாட்களாக உள்ளத்தை அழுத்திக் கொண்டிருந்த பெரும் சுமையன்றை இறக்கி வைத்து விட்ட ஆன்ம திருப்தி அவனது முகத்தில் நிரம்பித் தெரிந்தது. எழுந்து மண்-தூசுகளைத் தட்டி விட்டுக் கொண்டே தன் காரை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

2 comments:

Anonymous said...

Majeed - Yahya Gulf என்னிடம் சொன்ன‍து:

தங்களின் இன்றைய கடிதம் நிறைய பாதித்துவிட்டது என்னை.

பின்னூட்டத்தில் தெரிவித்தும் விட்டேன்

தம்பி ஸபீர் ஹாபிஸ்-ன் ‘ஆற்றங்கரை’ ஒரு கழுகு பறப்பதன் லாவகத்தோடு
எழுதப்பட்டிருக்கிறது.

நின்ற இடத்திலிருந்து தலைநிமிர்த்தி, சிறகிரண்டையும் விரித்து, சில தப்படிகள்
ஓடி, உயரம் அடையும் வரை ஆக்ரோஷமாக சிறகசைத்து மேலெழும்பி, பின் விரித்த சிறகோடு
அப்படியே சஞ்சரித்து, வேகமாகக் கீழிறங்கி, வேகங்குறைத்து, தரையிறங்கி, சில
தப்படிகள் ஓடி, நின்று, ஆசுவாசமடைவது போலவே...............................
வாவ்...

அருமை அருமை. அத்தனை உணர்வுகளும் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கின்றன.

எனது பாராட்டுக்களைத் தெரிவிக்கவும்.

ஆற்றங்கரையில் அமர்ந்தபோர்து, ஆசுவாசமல்ல, ஆழ்ந்த பெருமூச்சு வந்தது நிஜம்.

தமிழ்மகன் said...

இனி வேர்டில் பி.டி.எப். பைல்ககளை படிக்கலாம் ----- http://mytamilpeople.blogspot.in/2012/06/pdf-reader-in-microsoft-office.html

Twitter Bird Gadget