Wednesday, June 1, 2011

வெள்ளைத் தொப்பி பற்றிய வேதனையூட்டும் அறிக்கை

என்னிடம் ஒரு தொப்பியிருந்தது. வெள்ளை நூல்களால் பின்னி இழைக்கப்பட்டு, அவிழ்க்க முடியாத முடிச்சோடு முடிந்திருந்த அழகிய வெள்ளைத் தொப்பி.

அதன் உருவமைப்பும், அதை அணிந்து கொள்ளும் போது என்னைத் தேடி ஓடி வந்து, இறுக்கமாகக் கட்டியணைத்துக் கொள்ளும் ஓர் அமானுஷ்ய சுகத்தின் இதமான வருடலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

காற்று உட்சென்று வெளியேறத் தோதாக நெய்யப்பட்டிருந்த அதன் இழைப்பு முறை, எப்போதும் என்னை அதன்பால் ஈர்ப்பிலாழ்த்த முனையும்.

இத்தனைக்கும் அந்தத் தொப்பி நான் கற்பனையில் உருவம் சிருஷ்டித்து, கடை கடையாகத் தேடிச்சென்று வாங்கியதல்ல; நெய்வாளர்களை அழைத்து, உருவத்தை விபரித்து இழைத்துப் பெற்றதுமல்ல; பள்ளிக்குச் செல்கையில் எதேச்சையாகக் குறுக்கறுத்த ஒரு தொப்பி வியாபாரியிடம், என்னிடமிருந்த பணத்தை சில்லறையாக மாற்றிக் கொள்வதற்காக வாங்கியதுதானது.

இயல்பாகத்தான் அது என்னோடு வந்து ஒட்டிக்கொண்டது. ஆனால், குறுகிய காலத்திற்குள், அதற்கு முன்னர் நான் தேர்வு செய்து வாங்கிய எல்லா தொப்பிகளை விடவும் அது என் மேல் அதிக நாட்டம் கொள்ளலாயிற்று. எனக்கும் அதன் மீது பிடிப்பு ஏற்பட்டது. பசுமைத் தோற்றங்கண்டு நிலத்தில் பாவாது திரியும் ஓர் அழகிய இளம் யுவதியின் வாழ்க்கை மீதான பிடிப்பு போல்.

நாளடைவில் அதன் மீதான என் பிடிப்பு மோகமாக மாற்றமுறலானது. வாழ்வுதிர்க்கும் கனமான அழுத்தங்களிலிருந்தும், இளமையுள்ளம் தூண்டும் சில புறம்பான நடவடிக்கைகளிலிருந்துமான விடுதலையை வழங்கும் பாதுகாப்புக் கருவியாகவும் அது தோற்றங் கொடுக்கலாயிற்று.

இரவில் தூங்கச் செல்லுகின்ற போது தவிர, ஏனைய நேரங்களிலெல்லாம் என்னுடனேயே அது ஒட்டிக் கொண்டுருக்கும். ஆழ்ந்த உறக்கத்தில் மூடிய விழிகளுக்குள்ளும் கனவாகத் தோன்றி, கண் சிமிட்டி மறையும். காலையில் கண் விழித்ததும், என் முதற்பார்வையின் ஆகர்ஷிப்பில் குளிர்ந்து இளகிச் சிரிப்புமிழும்.

அதனுடனான என் நீடித்த தொடர்பின் காரணமாக, அது எனக்குரிய பிரத்தியேக அடையாளமாக உறுதிபட்டுப் போனது. அது என்னை விட்டு நீங்கியிருக்கும் தற்செயலான சந்தர்ப்பங்கள், வித்தியாசமான விருப்பற்ற சமூகப் பார்வையை என் முகத்திலுணர்த்தும். என்னுடன் அதுவும், அதனுடன் நானும் இணைந்திருக்க வேண்டுமென்றே என்னைப் போல் பலரும் உள்ளார்ந்த ஆர்வம் கொண்டிருந்தனர். இணைப்பு நீங்கி, பிரிவு ஏற்படுகின்ற போது ஆன்மீக வீச்சும் அழகும் குன்றி விடுவதாக அதற்கவர்கள் காரணமும் கூறினர்.

ஆனாலும், தொப்பிகள் மீது இயல்பாகவே வெறுப்பும் குரோதமும் கொண்டிருந்த சிலருக்கு இது எரிச்சலை ஏற்படுத்தியிருக்க வேண்டும். என தொப்பியை அவர்கள் முற்றாக வெறுத்தனர். அதன் நூலிழைப்பினது கவர்ச்சியோட்டம் அசூசையான அழுக்கு வடிவமென அவர்களால் உணரப்பட்டது. என்னிலிருந்து என் தொப்பியை அகற்றி, அதனை நாட்டை விட்டே தூர எறிந்து விட வேண்டுமென அவர்கள் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தனர்.

தொப்பியை அகற்றி விடும் முயற்சி அவர்களால் படிப்படியாக மேற் கொள்ளப்பட்டு வரலானது. அதற்கும் எனக்குமிருந்த செல்வாக்கு அவர்களது செயலில் சற்று தளர்வை ஏற்படுத்தியதேயாயினும், அதனை தடை செய்யும் திறனை அவை பெறமுடியவில்லை.

நான் அறிந்தவகையில் அவர்கள் மிக மோசமானவர்கள்தான். பெயருக்கேற்பவே மிருக வெறியும், குரூர உணர்வும் கொண்டு, புள்ளிமான்களை வேட்டையாடி மனித விரோத சக்தியாய் வளர்ச்சியுற்று வரும் அவர்களின் பார்வை என் தொப்பி மீது பட்டதிலிருந்து, அவர்களது எதிர்ப்புகள் எந்த ரூபத்திலும், எந்தக் கணத்திலும் என்னைத் தேடி வரலாமென்பதை நான் எதிர்பார்த்துத்தானிருந்தேன்.

என் எதிர்பார்ப்பைக் காயப்படுத்தாது ஒரு சிவப்புக் கடிதம் தபாலூடாக என்னைத் தேடி வந்தது. வாசிக்க வாசிக்க என் புருவங்கள் மேலுயர்ந்து உடம்பில் கொதிப்பேற்பட்டது.

தொப்பியின் அசையும், அசையா சொத்துகளையெல்லாம் கணக்கிட்டுப் பங்கு கேட்பதற்கு இவர்கள் யார்?

இந்த சொத்து சேர்ப்புக்காக இவர்கள் வழங்கிய பங்களிப்புகள் என்ன? தேரிழுக்க வடம்பிடித்தார்களா? வயல் வெளியில் இரவுக்காவல் நின்றார்களா? வியாபாரத்தில் பங்காளியானார்களா?

இருப்பவற்றையெல்லாம் ஒப்படைத்து விட்டு, இருக்குமிடத்தை விட்டும் வெளியேற வேண்டுமென்று கட்டளையிடுவதற்கு யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது?

ஒரு நாள் பள்ளிக்குச் செல்லப் புறப்பட்டு வீட்டை விட்டு வெளிப்பட்ட என் முன்னால் சரேலென வந்து நின்ற ஜீப் வண்டியிலிருந்து அவர்கள் திமுதிமுவென கீழே குதித்து என்னைச் சூழ்ந்து கொண்டனர்.

அவர்களது கைகளிலிருந்த உருண்ட கம்புகளும், இரும்புத் தடிகளும் என் தொப்பியைக் கிண்டியெடுத்துக் கைப்பற்றத் தயார்நிலையில் அங்குமிங்குமாக ஆடிக்கொண்டிருந்தன. அவை மூசிக்கொண்டிருந்த வக்கிரத்தனத்தின் கொடூரச் சாயல் அவர்களில் தெளிவாக இழையோடித் தெரிந்தது.

உடலைப் பிறாண்டும் கூரிய நகங்களும், கவ்விப் பிடித்து உயிரை உறிஞ்சும் வலிய பற்களுமாய் என்னைச் சூழ்ந்து நெருங்கிய அவர்கள் என் தொப்பியைக் கைப்பற்றும் நோக்குடன் தம் இரும்புத் தடிகளை மேலுயர்த்தினர். எனினும், அவர்களில் ஒருவன் முன்வந்து, என் கழுத்தில் கைவைத்தான். சொத்துகளையெல்லாம் கையளித்து விட்டு, தொப்பியை இன்றே ஊரிலிருந்து அப்புறப்படுத்தி விட வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் அது தம் இரும்புத் தடிகளின் நெருப்புத் தாக்குதலில் சுக்கு நூறாகச் சிதைந்தழிந்து போகுமெனவும் எச்சரிக்கை விடுத்தான்.

அழுத்தமான ஒரு பார்வையை தொப்பியின் மீது வீசி விட்டு, தன் ஆட்களை அழைத்துக் கொண்டே ஜீப்பிலேறிப் பாய்ந்து, தொலைவில் காணாமல் போனான்.

எனக்கு உடலில் நடுக்கமேற்பட்டது. அவர்களது எச்சரிக்கை பற்றிய சிந்தனையில் மூழ்கிய மனது, அது வக்கிரத்தனம் கொண்ட பகிரங்கமான உரிமை மறுப்பு என அடையாளப்படுத்தி சீற்றத்துடன் வெறுப்புதிர்த்தது.

இந்தத் தொப்பி இவர்களுக்கு என்ன கொடுமை செய்து விட்டது! அவர்களது சொத்துகளை சுரண்டிக் கொள்ளையிட்டதா? அவர்களது பெண்களைக் கற்பழித்துக் கழுத்தை நெரித்ததா?அவர்களது வாழிடங்களைத் தகர்த்து வஞ்சகத்தைத் தீர்த்துக் கொண்டதா? அவர்களைத் தனித்தனியாகவும், குழுக்குழுவாகவும் கொன்றொழித்துக் கொடுமைப்படுத்தியதா? இவையனைத்தையும் அவர்கள்தானே அதற்கு செய்தார்கள்.

இந்த அநீதியின் உளவியல் தாக்கத்திலிருந்து என் தொப்பியை மீட்டெடுக்க எத்தனை பாடுபட்டிருப்பேன். இப்போது, இருக்கின்ற அதன் ஒரேயோர் உரிமையான வாழ்விருப்பையும் நிராகரிக்க முனைகின்றார்களே. இந்த அநீதியாளர்களை எந்த நீதிமன்றத்தில் நிறுத்தி நியாயம் கேட்க!

உச்சி வெயிலுறைக்கும் நானாவித வாழ்க்கைதானெனினும், உரிமை மறுக்கப்பட முடியாத வாழ்வர்த்தம் கொண்டது அந்தத் தொப்பி. அதன் நூல்கள் பிற நாட்டில் உற்பத்தியாக்கப்பட்டிருக்கலாம்..

ஆனால், அது இழைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பிறப்புரிமையை எவ்வாறு மறுக்க முடியும்? பல தசாப்தங்களாக நீடித்து வரக்கூடிய அதன் வாழ்வை தங்களுக்குப் பிடிக்கவில்லை என்ற தம் விரோத உணர்வுக்காக ஒரு கூட்டம் அழித்து விட முனைவதை எதிர்க்காது, சமூகப் பிரக்ஞையற்று வாளாவிருக்க முடியுமா!

பள்ளிக்குச் சென்று விட்டு, திரும்பும் வழியில் சவற்காரமொன்றை வாங்கிக் கொண்டே வீட்டுக்கு வந்தேன். அவர்களின் அழுக்குக் கைகள் பட்டதால் ஏற்பட்ட களங்கத்தைத் துடைத்து தொப்பியைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

இதற்கு முன்னரும் அதில் பல அழுக்குத் துகள்கள் படிந்திருந்த போதிலும், அதை அகற்ற வேண்டுமென்ற உணர்வு ஏற்படவில்லை. இப்படியான களங்கங்கள்தான் அந்த உணர்வையும் ஏற்படுத்துகின்றதென்ற யதார்த்தத்தை நினைக்கையில் மனது வலிப்புற்றது.

உள்ளத்தில் வலுவுற்றுப் படர்ந்துள்ள இறுக்கத் தன்மைகள் ஈரமுற்றிளகுவதற்கும் இந்தக் களங்கங்கள்தான் தேவைப்படுகின்றனவோ! ஈரமணலில்தானே கால்கள் சுலபமாய் அழுந்திப் பதியும்.

தண்ணீரில் கழுவி, அழுக்கு நீக்கி, வெயிலில் உலரப்போட்டு காயவைத்துக் கையிலெடுத்து அதை அணிந்து கொண்ட போது, மனதுக்குள் நிம்மதிப் பெருக்கின் அடையாளமான ஆசுவாசப் பெருமூச்சொன்று உடல் முழுக்கப் பரவியோடிற்று. இனி, மறுநாளுக்காகக் காத்திருக்க வேண்டும். அவர்களிடமிருந்து என் தொப்பியைக் காப்பாற்ற வேண்டும். முடியுமா?

கம்பும் தடியுமாக உறுமிக் கொண்டிருக்கக் கூடிய அவர்களுக்கு முன்னால் உள்ளத்துறுதி கூட இன்றி தளர்வுற்றிருக்கக் கூடிய நான், தொப்பியைக் காப்பாற்றுவதென்பது எப்படிச் சாத்தியமாகும்.

எனக்கு நான் மட்டும்தானே இங்கு உதவி. உதவும் பண்புகள் ஆரம்பத்தில் போன்று தொடர்ந்தும் இருந்து வந்திருந்தால் எத்தனை இழப்புகளையும் அழிவுகளையும் தவிர்த்திருக்கலாம். இப்போது எஞ்சியிருப்பதெல்லாம் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையின்மையும் அச்சமும் மட்டும்தானே.

அவர்கள் மூலமான நிர்ப்பந்தங்கள் பிடரியைப் பிடிக்கையில் வெறுப்புடனான மனக்கசப்பும், விடுதலை கிடைக்கையில் பிரமிப்புடனான ஈர்ப்புமே வாழ்வின் நாளாந்த நிகழ்வாயிற்றுள்ளமைக்கான பொறுப்பை யார் ஏற்க மறுக்க முடியும்!

ஒரு விடிவு வரும் என்ற எதிர்பார்ப்புக்கான காத்திருப்புகள்தான் வாழ்வின் தொடர்தலுக்கு காரணமாகி விட்டுள்ளதென்பதுதான் உண்மை.

மறுநாள் காலையில் கண்விழித்த போது, தொப்பியின் மீதான என் பார்வையில் அன்பையும் கனிவையும் விட பரிதாபமே மேலோங்கி நின்றதை என்னால் உணர முடிந்தது. தொப்பியை பிரிந்து விட நேருமோ என்ற பயம் மனதுக்குள் திகைப்பூட்டும் இருளாய் பரவியிருந்தது.

கனிந்து வேண்டி கையேந்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற உளத்தீர்மானம் எரிச்சலையும் அவமானத்தையும் ஏற்படுத்திற்று.

அவர்கள் வந்தார்கள். அவர்களது பார்வையிலும், அதை உற்பத்தியாக்கிய கண்களிலும் குரூரம் கொப்பளித்துக் கரைபுரண்டது. கையிலிருந்த இரும்புத் தடியால் என் நடுமண்டையில் ஓங்கியடித்து இரத்தப் பீறிடலுடன் மயங்கிய என்னை ஓரத்தில் உதைத்துத் தள்ளினார்கள். வேட்டைப் பற்கள் பளபளத்த விகாரச் சிரிப்புடன் தம் முரட்டுக் கரங்களால் என் தொப்பியை கைப்பற்றினார்கள்.

இரக்கமற்றழுத்திய அந்தக் கொடும்பிடியில், மிக மென்மை படர்ந்திருந்த அந்தத் தொப்பி கழுத்து நெரிக்கப்பட்டு முழி பிதுங்குவதாக தளர்ந்து வாடிற்று.

தொப்பியைக் கைப்பற்றி விட்ட வெற்றிப் புளகாங்கிதத்தில் அவர்கள் கெக்கலித்துச் சிரித்தார்கள். ஆனந்தக் கூத்தாடினார்கள். அதனை அங்குமிங்குமாக விசிறியடித்து அதன் அலைக்கழிப்பைக் கண்டு ரசித்து மகிழ்ந்தார்கள்.

ஒருவன் முன்வந்து தொப்பியின் முடிச்சை அறுத்தெறிந்தான். அதன் நூலிழைகளை கர்னகடூரமாக கைகளால் இழுத்துப் பிரித்து விசிறியடித்தான். ஒவ்வொரு நூலாக எடுத்து, தன் கால்களின் கீழ் நசித்துத் துவம்சம் செய்தான். தன் இரும்புத் தடியால் நெருப்புப் புகை கக்கி அதன் நூலினுயிர்ப்பை சுட்டெரித்தான்.

எல்லோருடைய பாதங்களும் அழுத்தி அவஸ்தை கொடுத்ததான அந்தக் குரூர வக்கிரத்தனத்தின் மேவிய அழிச்சாட்டியத்தினால் சோபையிழந்து தன் அடையாளப் பெயரையும் தொலைத்து விட்டு நசுங்கியழிந்து போகலாயிற்று அந்தத் தொப்பி... என் உள்ளத்தில் நிரந்தர இடம்பிடித்திருந்த அந்த வெள்ளைத்தொப்பி.

No comments:

Twitter Bird Gadget