Showing posts with label குறுநாவல்கள். Show all posts
Showing posts with label குறுநாவல்கள். Show all posts

Tuesday, June 15, 2010

தூற்றிப் பேசலும் துதி பாடலும் பற்றிய கதை

(01)

தொந்தி வயிறு, தொங்கும் கழுத்து, கறுத்த விகாரமான முகம், காவி படிந்த கோரப் பற்கள், பழுப்பேறிச் சிவந்த கண்கள். இப்படியான ஒருவரிடம், அவரது எருமை மாட்டுப் பாரத்தைத் தாங்கும் கட்டில் மெத்தையின் கீழ் நசிபட்டுக் காலந்தள்ளுவதென்றால் யாருக்குத்தான் வெறுப்பேற்படாது. நான் மட்டும் அதற்கு விதிவிலக்காக முடியுமா? இரண்டு வாரங்களாக வெறுப்புடன் இந்தச் சோகத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறேன். என்னை மீட்டுச் செல்ல யாரும் வரவில்லை. பக்கத்திலிருப்பவன் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான். என்னை விடப் பத்து மடங்கு பெரியவன் என்பதால் அவனுக்குக் கொஞ்சம் தலைக்கனம் அதிகம்தான். அடிக்கடிக் கைமாற்றப்பட்டு அலைக்கழியும் எரிச்சல் மிகு வாழ்க்கை அவனுக்கில்லாதிருந்ததற்கு, அவனது இந்தப் பெரியதனமும் ஒரு காரணம். மானுடத்தின் ஏற்றத்தாழ்வுகளெவையும் அவனுக்குத் தெரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம், கொழுத்த வயிறுடையவர்களும், அவர்களது குளுகுளு வாழ்க்கையும்தான்.

என் நிலைதான் பரிதாபமானது. ஒரு நாளில், கணக்கின்றிக் கைமாறித் திரிகிறேன். வியர்வை வாடையையும், கண்ணீர் உவர்ப்பையும் அடிக்கடி அனுபவிக்கிறேன். வெயிலின் அகோரத்திற்கும், மழையின் ஈரத்திற்கும் பலியாகிப் பலவீனனாகிறேன். அழுக்குக் கைகளில் கசக்கப்பட்டு, துர்வாடைப் பைகளுள் திணிக்கப்பட்டு சுருக்கமும் கிழிவுமாய்ச் சோபையிழக்கிறேன்.

Tuesday, June 1, 2010

சிதிலம் சிதிலமாய்...


(01)

வெள்ளை மணலில் பாதங்கள் அழுந்திப் புதைய, கட்டுக் குலையாத தன் தேகச் செழுமையையும், அதன் அழகைப் போர்த்தி மறைத்த பட்டுப் பாவாடை சட்டையின் பளபளப்பையும் பெருமிதமாய்ப் பார்த்துக் கொண்டே, தன் வீட்டுக்கும், சாச்சியின் வீட்டுக்கும் இணைப்புப் பாலமாக இருக்கும் ஒழுங்கையினூடாக நடந்து கொண்டிருந்த பாத்திமா, மேகக் கூட்டங்கள் குவிந்து மறைக்கும் மாலைச் செந்நிறத்தின் ரம்மியத் தோற்றத்தை ரசிப்பதை விடுத்து, உணர்வுகளெங்கும் குமிழி விட்டுக் கிளுகிளுப்பூட்டும் அமீனின் இதமான நினைவுகளில் மனம் முழுக்கக் கிறங்கி லயித்திருந்தாள்.

ஒழுங்கையைக் கடந்து சாச்சியின் வீட்டையடைய, அதிகபட்சமாக ஒரு நிமிடமேயாகுமென்றாலும், அந்த ஒரு நிமிடத்திலும் அமீனுடன் பேசிப்பழகிக் களிக்கும் ஓராயிரம் கனவுகளைக் கொத்தாகச் சிறையெடுத்து மனதுக்குள் அழுத்தித் திணித்துப் பத்திரப்படுத்திக் கொண்டு மகிழ்ச்சியில் திளைப்பாள் பாத்திமா. அந்த ஒரு நிமிடப்பொழுது, அவளது வாழ்க்கையின் வேர்களில் செழிப்பான பசளையாகப் படிந்து, மனதிலும் உடலிலும் உறுதியையும் நிறைவையும் துளிர்க்கச் செய்து சிரிக்கும்.

சூரியன் சரிந்து இருள் கவியத் தொடங்கும் நேரமானதும் சாச்சியின் வீட்டில் பிரசன்னமாகிவிடுவது பாத்திமாவின் நாளாந்தப் பணிகளில் ஒன்று. அவளது இந்த வருகைக்கு, நான்கு ஆண் பிள்ளைகளுடன் சிரமப்படும் சாச்சிக்கு வீட்டுதவிகள் ஏதாவது செய்து கொடுக்க முடியும் என்ற பொது நோக்கைவிட, சாச்சியின் மூத்த புதல்வனான ரபீக்கின் நண்பன் அமீனைச் சந்திக்க முடியும் என்ற சுயநலனே முக்கிய காரணமாயிருந்தது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக, யாரும் முகம் சுளிக்காத வகையில் மிக நாகரிகமாகவும், புனிதமாகவும் ஊர்ந்து கொண்டிருக்கும் அமீனுக்கும் பாத்திமாவுக்கும் இடையிலான காதல், அவளது சாச்சியின் வீட்டைப் பொறுத்தவரை எல்லோரும் அறிந்த இரகசியம். சாச்சியின் கடைக்குட்டியான நௌபர் தொடக்கம் மூத்தவன் ரபீக் வரை எல்லோரும் வழங்கிய ஒத்துழைப்புகள், அமீனுக்கும் பாத்திமாவுக்கும் இடையிலான தொடர்புகளுக்கும், இரண்டு மூன்று மீற்றர் இடைவெளி பேணி நிகழும் அவர்களது நேரடிச் சந்திப்புகளுக்கும் சிறந்த களத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தன.

Twitter Bird Gadget