Monday, April 26, 2010

ஆட்சி


ஒரு சர்வாதிகாரி போல்
கைப்பற்றிக் கொண்டாய்
முரட்டுப் போர்வைக்குள் துடிக்கும்
என் மிருதுவான உள்ளத்தை

அண்டவெளியெங்கும் சஞ்சரிக்கும்
கற்பனைகளின்
சிறகொடித்தாய்
சுதந்திரம் களைந்து
சிறைப்பிடித்தாய்

ஒரு பறவையாய்
ஒரு தென்றலாய்
ஒரு மேகமாய்
அந்தரித்த என்
வாழ்க்கைச் சுவாசங்கள்
அடங்கிற்று
உன் ஒரே கண் பார்வைக்குள்

என் கனவுகளின் மூச்சுகளில்
கண்களின் வீச்சுகளில்
கடிவாளமிட்டாய்

உன் நினைவு
நெஞ்சுறுத்தும் தகிப்பை
நெளிய வைக்கும் அவஸ்தையை
வீசும் அனற்திரட்சியை
மிஞ்சிற்று

கைகளில் விலங்கிட்டு
படுக்கையில் முட்பரப்பி
நெஞ்சில் ஆணி அறைந்து
கால்களைப் பிணைத்து
அராஜகம் பண்ணிற்று
உன் கொடுங்கோன்மை

ஆனாலும் -
உன் சர்வாதிகாரத்திலும்
உன் கொடுங்கோன்மையிலும்
உன் அராஜகத்திலும்
எனக்குள்
ஒரு மகிழ்ச்சி பரவுகிறதே
ஒரு நிம்மதி நிறைகிறதே
அது ஏன் கண்மணி

நீ என்
காதலி என்பதாலா?

June 2006

No comments:

Twitter Bird Gadget