Saturday, April 24, 2010

தூண்டிலும் மீனும்


பளபளப்பான இரையுடன்
ஈர்க்கும் வாசத்துடன்
நீருக்குள் இறங்கிற்று
ஒரு தூண்டில்

சடைத்த தாவரங்களில்
படர்ந்த பாசிகளில்
வழுக்கி நழுவிப்
பூமியைத் தீண்டிற்று

உடல் மினுக்கி
செழிப்பான சுதந்திரத்திடை
நீந்திப் பழகும்
இளம் மீன்களின் கண்களில்
மோகத்தைப் பாய்ச்சிற்று

ஆர்வமும் ஆசையும் உந்த
தூண்டிலை நெருங்கிற்று
இளமை முதிராத
அழகிய மீனொன்று

எச்சிலூற
பிஞ்சு வாயை அகலத் திறந்து
இரையைக் கௌவிற்று
மீன்.

அதன் பிற்பாடு
நீர் அறைந்த பிடரி வலியும்
மூச்சைத் தடுத்து
உடலைச் சுட்ட
மணற் சூடுமே
அதற்கெஞ்சிற்று

கொஞ்சம் கொஞ்சமாக
அடங்கிற்று
அதன் உயிர்த்துடிப்பு!

இதிலொன்றும்
அநீதியில்லை
தூண்டில் நீயாகவும்
மீன் நானாகவும்
இருக்கும் வரை
இதிலொன்றும்
அநீதியில்லை தேவி!

July 2006

No comments:

Twitter Bird Gadget