Friday, May 21, 2010

விழிப்புக்கான ஓய்வு


நிரந்தரமற்ற அந்தக் கணங்களில்
நான் -
வெடித்துப் பறக்கிறேன்.

பஞ்சுமூட்டைக்குள்
குப்புற விழுந்தாலும்
வலிக்குமா என்ன!

மூலை இடுக்குகளிலும்
கட்டில் கீழ்ப்புறத்திலும்
ஒளிந்திருந்து கண்சிமிட்டும்
இருட்டுக்கு
கொஞ்சமும் வெட்கமில்லை.

எமக்கும் கூடத்தான்!

உணர்வுகளின் கொதிப்புடன்
வெளிப்பட்டுத் தெறிக்கும்
நிர்வாணத்துக்குள்
அடங்கிப் போகும் சகலமும்.

அரிந்து அடுக்கப்பட்ட
நிலாத்துண்டுகளாய்ப் பளபளக்கும்
அந்த நினைவுகளின் மீதுதான்
விடியல் விழிக்கும்.

மனதெங்கும் இனிக்கும்
அந்த நினைவின் கரங்கள்
பிற்பாடான
வாழ்க்கை இறுக்கங்களையெல்லாம்
வாரிச் சுறுட்டி
குப்பையாய் எறியும்.

மெல்லிய இருட்டிலும்
மிக நுண்ணிய
உணர்வுகளைப் புரட்டிப் போடும்
பார்வைப் புலன்
பகலில் ஓய்வெடுக்கும்
மற்றுமோர் இரவுக்கான
விழிப்புக்காக...
July 2006

No comments:

Twitter Bird Gadget